ஊருக்குள் புகுந்து ஆடுகளை அடித்து கொல்லும் சிறுத்தை.. அச்சத்தில் மக்கள்.. நடவடிக்கை எடுக்குமா வனத்துறை..?
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே ஊருக்குள் புகுந்து சிறுத்தை ஒன்று ஆடுகளை அடித்து கொன்றுள்ளதால், அப்பகுதி மக்கள் பீதி அடைந்துள்ளனர்.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகாவிற்குட்பட்ட கடமலைக்குண்டு அருகில் உள்ள மேகமலை அடிவார பகுதியில் வனவிலங்குகள் அடிக்கடி ஊருக்குள் புகுந்து ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை அடித்து கொன்று வருவது வாடிக்கையாக உள்ளது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு விவசாயி ஒருவரது ஆடுகளை சிறுத்தை அடித்து கொன்றுள்ளது. இந்நிலையில் நேற்று இரவு இதே பகுதியை சேர்ந்த பாண்டி என்பவரது 3 ஆடுகளை சிறுத்தை அடித்து கொன்றுள்ளது.
காலையில் இறந்த கிடந்த ஆட்டை பார்த்து அதிர்ச்சியடைந்த விவசாயி, சிறுத்தை பிடித்து வனப்பகுதியில் விட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். மேலும் அப்பகுதி மக்கள் கூறுகையில்,” நாங்கள் வசிக்கும் இடத்தில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது. தொடர்ந்து ஆடுகள் உயிரிழந்து வருவது எங்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது என்று கூறினர்.
மேலும் படிக்க:TN Govt : இனி குடும்ப அட்டைகளை தபால் மூலமே பெறலாம்.. தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு !
மேலும் ஆடுகளை செந்நாய் அடித்து கொன்றிருந்தால் எலும்புகளை உண்ணாது. ஆனால் தற்போது இறந்து கிடக்கும் ஆடுகளின் எலும்புகளும் மாயமாகி இருப்பதால், சிறுத்தையாக இருக்க தான் வாய்ப்பிருக்கிறது. மேலும் ஆடுகளை அடித்து கொல்வது சிறுத்தையா? அல்லது புலியா? என்று தெரியவில்லை என்றும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே இப்பகுதியில் வனத்துறையினர் உடனடியாக கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும். மேலும் இரவுகளில் ஊருக்குள் புகுந்து நடமாடும் சிறுத்தை பிடித்து வனப்பகுதியில் விட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர். இதனிடையே சிறுத்தை அடித்து கொன்றதாக கூறப்படும் பகுதியில் வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும் படிக்க: ஏடிஎம்- யில் தவறவிட்ட ரூ.40 அயிரம் பணம்.. அப்படியே எடுத்து வந்து போலீசில் ஒப்படைத்த இளைஞர்களுக்கு பாராட்டு..