குழந்தைகள் செல்போனில் என்ன மாதிரியான தளங்களை பயன்படுத்துகிறார்கள் என்று பெற்றோர்கள் கண்காணிக்கணும்...
திருவாரூர்
தங்களது குழந்தைகள் செல்போன் மற்றும் கணினிகளில் என்ன மாதிரியான தளங்களை பயன்படுத்துகிறார்கள் என்று பெற்றோர்கள் கண்காணிக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆட்சியர் அறிவுரை வழங்கியுள்ளார்.
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் இல.நிர்மல்ராஜ் நேற்று செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டார்.
அதில், “திருவாரூர் மாவட்டத்தில் உள்ள சிறுவர், சிறுமிகள் யாரும் நீலத் திமிங்கலம் (புளூ வேல்) விளையாட்டை விளையாட வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறது.
தங்களது குழந்தைகள் செல்போன் மற்றும் கணினிகளில் என்ன மாதிரியான தளங்களை பயன்படுத்துகிறார்கள் என்று பெற்றோர்கள் கண்காணிக்க வேண்டும்.
மேலும், தங்களது உறவினர்கள் மற்றும் அக்கம்பக்கத்தில் உள்ள குழந்தைகளின் சமீபத்திய நடத்தை தொடர்பான நடவடிக்கைகளில் சந்தேகம் ஏற்பட்டாலோ, நீலத் திமிங்கலம் விளையாட்டை விளையாடிக்கொண்டு அதிலிருந்து வெளிவர முடியாத நிலையில் உள்ளனர் என்று தகவல் தெரிந்தால் உடனடியாக மாவட்ட ஆட்சியர் அலுவலம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்க வேண்டும்.
நீலத் திமிங்கல விளையாட்டு தொடர்பான புகார்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக தனிப்பிரிவிற்கும், நீலத் திமிங்கலம் விளையாட்டில் ஈடுபட்டு அதிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகளைப் பெற மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்” என்று அவர் தெரிவித்தார்.