தமிழகத்தில் பல மாவட்டங்களில் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்ததற்கு நயினார் நாகேந்திரன் திமுக அரசை கண்டித்துள்ளார். 

நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம்

தமிழகத்தில் பல மாவட்டங்களில் மழை காரணமாக கொள்முதல் நிலையங்களில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் நனைந்து சேதமடைந்தது குறித்து திமுக அரசை நயினார் நாகேந்திரன் கடுமையாக விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக தமிழக பாஜக மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்: ஈரோடு, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகளில் அரசு கொள்முதல் நிலையங்களில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த 10,000-த்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்துள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் வேதனையளிக்கின்றன. வேகாத வெயிலில் சளைக்காமல் பாடு படும் நமது விவசாயிகளின் மொத்த உழைப்பையும் இப்படி அலட்சியப்படுத்தி வீணாக்குவது தான் திராவிட மாடலா?

சேமிப்பு துறைக்கான நிதி ஒதுக்கீட்டை குறைத்தது ஏன்?

இப்படி, ஒரு பருவ மழைக்கே பழுதடைந்து உணவுப் பொருட்கள் பாழாய் போகும் லட்சணத்தில் இயங்கும் அரசு உணவு சேமிப்பு கிடங்குகளை வைத்துக் கொண்டு, திமுக அரசு இந்த வருடத்தின் வேளாண் பட்ஜெட்டில் உணவு சேமிப்புத் துறைக்கான நிதி ஒதுக்கீட்டை கடந்த வருடத்தை விட 50% குறைத்தது ஏன்? தனது ஆட்சிக் காலம் முடிவதற்குள் தமிழகத்தின் முதுகெலும்பை நொறுக்கும் நோக்கமா?

விவசாய பொருட்களின் கொள்முதலில் ஏகப்பட்ட குளறுபடிகள்

திமுக அரசு உழவர்களை உயிராக நினைக்கிறது என்றெல்லாம் வசனம் பேசும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆட்சிப் பொறுப்பெற்றது முதல், தமிழகத்தில் பாசனக் கால்வாய்கள் சரிவரத் தூர்வாரப்படுவதில்லை, தமிழகத்தின் மொத்த சாகுபடி பரப்பளவு குறைந்துள்ளது, சிறு மழை பெய்தாலும் வயலில் நெற்பயிர்கள் மூழ்கி நாசமடைகின்றன, விவசாயப் பொருட்களின் கொள்முதலில் ஏகப்பட்ட குளறுபடிகள் என விவசாயிகளின் வாழ்வு அந்தரத்தில் ஊசலாடுகிறது. இதே நிலை தொடருமானால் தமிழகத்தில் தானியப் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உண்டாகிவிடும்.

அரசு உணவு சேமிப்புக் கிடங்குகளை உடனே சீர்படுத்த வேண்டும்

எனவே, திமுக அரசின் நிர்வாகக் குளறுபடிகளால் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் விவசாயப் பெருமக்களுக்கு தகுந்த இழப்பீடு வழங்குவதோடு, தமிழகத்தில் உள்ள அரசு உணவு சேமிப்புக் கிடங்குகளை உடனே சீர்படுத்த வேண்டுமென தமிழக முதல்வரை வலியுறுத்துகிறேன் என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.