11 ஆண்டுகள் பணியாற்றிய கால்நடை உதவி மருத்துவர்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போட்டித் தேர்வினை எழுதுவது என்று சொல்வது இயற்கை நியதிக்கு மாறான செயல் என ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். 

கால் நடை மருத்துவர்கள் பணி

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

கால் நடை மருத்துவர்கள் பணி நிரந்தரம் தொடர்பாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்ட அறிக்கையில், அதில், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களுடைய ஆட்சிக் காலத்தில், கால்நடை மருத்துவர்களின் அவசர மற்றும் அவசியத்தேவையைக் கருத்தில் கொண்டு, கால்நடை பராமரிப்புத் துறையில் ஏற்கெனவே காலியாக உள்ள 258 இடங்கள் மற்றும் தரம் உயர்த்தப்பட்ட கால்நடை மருந்தகங்களுக்காக புதிதாக உருவாக்கப்பட்ட 585 கால்நடை உதவி மருத்துவப் பணியிடங்கள் என 843 கால்நடை உதவி மருத்துவர் பணியிடங்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தின்மூலம் நிரப்பப்பட்டன. இவ்வாறு முறையாக வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மூலம் மூப்பு மற்றும் திறன் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட கால்நடை உதவி மருத்துவர்கள் காலமுறை ஊதியத்தில் கடந்த 11 ஆண்டு காலமாக பணியாற்றி வருகிறார்கள்.

454 கால்நடை உதவி மருத்துவர்கள்

இந்தப் பதவியை வகிப்பதற்கான அனைத்துத் தகுதியையும் அவர்கள் பெற்று இருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் தமிழ்நாடு மாநில மற்றும் சார்நிலை பணிகள் விதி 10(A)(i)-ன்கீழ் பணியமர்த்தப்பட்டவர்கள். இவர்களுடைய பணி தற்காலிகம் என்றாலும், ஊதிய உயர்வு வழங்கப்படுவதோடு, பங்களிப்பு ஓய்வூதியத்திலும் இணைந்து அதற்கான பங்கினையும் செலுத்தி வருகிறார்கள். 11 ஆண்டுகளுக்கு முன்பு 843 பேர் கால்நடை உதவி மருத்துவர்களாக பணியமர்த்தப்பட்டாலும், தற்போது 454 கால்நடை உதவி மருத்துவர்கள் மட்டுமே பணிபுரிந்து வருகின்றனர். 11 ஆண்டுகள் பணியாற்றிய நிலையில், அவர்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போட்டித் தேர்வினை எழுதுவது என்று சொல்வது இயற்கை நியதிக்கு மாறான செயல். கடும் போட்டிகள் நிரம்பியுள்ள தற்போதைய சூழ்நிலையில், நாற்பது வயதை கடந்துள்ள சூழ்நிலையில், தற்போதுள்ள பாடத் திட்டங்கள் மாறியுள்ள நிலையில், அவர்களால் இளம் கால்நடை பட்டதாரிகளுடன் போட்டிப் போடுவது என்பது இயலாத காரியம். 

12,000 பேர் பணி நியமனம்

பத்தாண்டுகள் தொடர்ந்து பணியாற்றினால் நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற சட்டம் இருக்கின்ற நிலையில், இதற்கு ஆதரவாக உச்ச நீதிமன்ற மற்றும் உயர் நீதிமன்ற தீர்ப்புகள் இருக்கின்ற நிலையில், இதற்கான முன்னுதாரணம் இருக்கின்ற நிலையில் அவர்களை போட்டித் தேர்வு எழுதச் சொல்வது ஏற்புடையதல்ல. மாண்புமிகு புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் ஆட்சிக் காலத்தில் தமிழ்நாடு மாநில மற்றும் சார்நிலை பணிகள் விதி 10(A)(i)-ன்கீழ் பணியமர்த்தப்பட்டு நீண்ட நாட்களாக பணியாற்றி வந்த 12,000-க்கும் மேற்பட்ட இளநிலை உதவியாளர்கள், தட்டச்சர்கள், சுருக்கெழுத்து தட்டச்சர்கள் 1984 ஆம் ஆண்டு பணி நிரந்தரம் செய்யப்பட்டனர் என்பதை இந்தத் தருணத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

பணி நிரந்தரம் செய்திடுக

தற்போது, தங்களுடைய பணி நிரந்தரம் செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தி 454 கால்நடை மருத்துவர்கள் ஒரு நாள் அடையாள அறவழி போராட்டத்தை நடத்தியுள்ளனர். கால்நடை உதவி மருத்துவர்களின் கோரிக்கையில் உள்ள நியாயத்தையும், அவர்கள் இவ்வளவு நாட்கள், குறிப்பாக கொரோனா தொற்று காலத்தில் ஆற்றிய சேவையையும் கருத்தில் கொண்டு, ஏற்கெனவே உள்ள முன்னுதாரணத்தை பின்பற்றி, 454 கால்நடை உதவி மருத்துவர்களின் பணியை உடனடியாக நிரந்தரம் செய்ய வேண்டுமென்று வலியுறுத்துவதாக ஓ.பன்னீர் செல்வம் கேட்டுக்கொண்டுள்ளார். 

இதையும் படியுங்கள்

கள்ளச்சாராயம் குடித்து இறக்கணும்.. குடும்பமே நினைக்கும் அளவுக்கு நிதி கொடுக்கறீங்களே நியாயமா.. செல்லூர் ராஜூ