ஜெயலலிதாவுக்குப் பிறகு அ.தி.மு.க. ஆட்சி கவிழ்ந்து விடும் என்ற எதிர் கட்சியினரின் கனவு பலிக்காது. ஈ.பி.எஸ்-ம், ஓ.பி.எஸ்-ம் சிறப்பாக ஆட்சி நடத்தி வருகின்றனர் என்று தமிழக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.  

திருவண்ணாமலை

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

ஜெயலலிதாவுக்குப் பிறகு அ.தி.மு.க. ஆட்சி கவிழ்ந்து விடும் என்ற எதிர் கட்சியினரின் கனவு பலிக்காது. ஈ.பி.எஸ்-ம், ஓ.பி.எஸ்-ம் சிறப்பாக ஆட்சி நடத்தி வருகின்றனர் என்று தமிழக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார். 

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் ஆகியோரின் 17 மாத ஆட்சி குறித்த சாதனை விளக்க 'சைக்கிள் பேரணி' திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் நடந்தது. இது மூன்றாவது கட்ட சைக்கிள் பேரணியாகும்.

இப்பேரணி திருவண்ணாமலை மாவட்டம், வடக்கு, தெற்கு மாவட்ட அ.தி.மு.க. ஜெயலலிதா பேரவையின் சார்பில் நடைப்பெற்றது. ஆரணி - சேவூர் பைபாஸ் சாலையில் இருக்கும் அம்மா திடலில் நடைப்பெற்ற இப்பேரணியின் தொடக்க நிகழ்ச்சிக்கு தமிழக வருவாய்த்துறை அமைச்சரும், ஜெயலலிதா பேரவையின் மாநிலச் செயலாளருமான ஆர்.பி.உதயகுமார் தலைமை வகித்தார். 

இதில், மாவட்டச் செயலாளர்கள் தூசி மோகன் எம்.எல்.ஏ, பெருமாள் நகர் ராஜன், கலசபாக்கம் எம்.எல்.ஏ. பன்னீர்செல்வம், திருவண்ணாமலை தெற்கு மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலாளர் அருள்பழனி, முன்னாள் அமைச்சர்கள் முக்கூர் சுப்பிரமணியன், அக்ரி கிருஷ்ணமூர்த்தி, ராமச்சந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் செஞ்சி ஏழுமலை, வனரோஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

இந்து சமய அறநிலையத் துறை அமைச்சரும், திருவண்ணாமலை வடக்கு மாவட்ட ஜெயலலிதா பேரவையின் செயலாளருமான சேவூர் ராமச்சந்திரன் வரவேற்றுப் பேசினார். சைக்கிள் பேரணியை தொடங்கி வைத்த அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பின்வருமாறு பேசினார்: 

"ஜெயலலிதாவுக்குப் பிறகு இந்த ஆட்சி கவிழ்ந்து விடும் என்று எதிர் கட்சியினர் கனவு கண்டனர். புதிய முதலமைச்சர் நாங்கள்தான் என்றும் கூறிக்கொண்டனர். நீதிமன்றத்தின் மூலமாவது ஆட்சியை கவிழ்த்து விடலாம் என்று நினைக்கின்றனர். 

அது நடக்காது. அவர்களுடைய கனவு பலிக்காமல் 17 மாத காலமாக எடப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வம் சிறப்பாக ஆட்சி நடத்தி வருகின்றனர். நம்மையும் சிறப்பாக வழிநடத்திச் செல்கின்றனர்" என்று கூறினார்.

இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் கே.சி.வீரமணி, நிலோஃபர்கபில், எம்.எல்.ஏ.க்கள் சரவணன், ரவி, நடிகர் போளூர் ஜெயகோவிந்தன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ஜெயசுதா, நளினி மனோகரன், தமிழரசன், ஜெயலலிதா பேரவை மாநில துணைச் செயலாளர் மூவேந்தன், மாநில இணைச் செயலாளர் முகில், வெற்றிவேல், 

மாவட்ட இளைஞர் பாசறைச் செயலாளர் கஜேந்திரன், ஒன்றியக் குழு முன்னாள் தலைவர்கள் வழக்குரைஞர் சங்கர், கோவிந்தராஜன், நகரச் செயலாளர் அசோக் குமார், ஒன்றியச் செயலாளர் வேலு உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர். ஆரணி நகர ஜெயலலிதா பேரவைச் செயலாளர் பாரி பாபு நன்றி கூறி பேரணியை முடித்துவைத்தார்.