சொர்க்கவாசல் திறப்பு; பக்தர்களுக்காக 12 மணிநேரத்தில் 1 இலட்சத்து 18 ஆயிரம் லட்டுகள் தயாரிப்பு...
திருப்பூர்
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருப்பூர் வீரராகவபெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்புக்கு வரும் பக்தர்களுக்காக 1 லட்சத்து 18 ஆயிரம் லட்டுகள் 12 மணிநேரத்தில் தயாரிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளன.
திருப்பூரில் உள்ள புகழ்பெற்ற வீர ராகவபெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு வருகிற 29-ஆம் தேதி (அதாவது நாளை) சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் அடியார்கள் கோவில் நுழைவுவாயில் வழியே உள்ளே சென்று வீரராகவபெருமாளை தரிசனம் செய்துவிட்டு சொர்க்கவாசல் வழியே வெளியே வருவர். அப்போது சொர்க்கவாசல் அருகே அடியார்களுக்கு லட்டு பிரசாதம் வழங்கப்பட உள்ளது.
இதற்காக திருப்பூர் ஸ்ரீவாரி டிரஸ்ட் சார்பில் திருப்பூர் காமாட்சியம்மன் கோவில் திருமண மண்டபத்தில் லட்டுகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
இதுகுறித்து திருப்பூர் ஸ்ரீ வாரி டிரஸ்ட் நிர்வாகிகள், "வீரராகவ பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பையொட்டி எங்கள் டிரஸ்டின் பக்தர்கள் குழு சார்பில் தொடர்ந்து 9 வருடங்களாக அடியார்களுக்கு லட்டு பிரசாதம் வழங்கி வருகிறோம்.
அதேபோல இந்த வருடம் 1 இலட்சத்து 18 ஆயிரம் லட்டுகள் தயாரித்து வருகிறோம். இந்த லட்டுகள் தயாரிக்க 1500 கிலோ கடலைமாவு, 3,000 கிலோ சர்க்கரை, 1,500 கிலோ எண்ணெய், 75 கிலோ நெய், 50 கிலோ திராட்சை, 50 கிலோ முந்திரி ஆகியவை பயன்படுத்தப்பட்டுள்ளன.
லட்டுகள் தயாரிக்கும் பணியில் 75 சமையல் கலைஞர்கள், 500 பெண்கள் ஈடுபட்டனர் இன்று (நேற்று) காலை 9 மணிக்கு தொடங்கிய இந்த பணி இரவு 9 மணிக்கு முடிவடைந்தது" என்று அவர்கள் தெரிவித்தனர்.