ஒரே டிக்கெட்… பஸ்சிலும் போகலாம், டிரெயினிலும் போகலாம்… சென்னையில் விரைவில் அறிமுகம் !!!
சென்னையில் ஒரே டிக்கெட் மூலம் மாநகர பேருந்து, மின்சார ரயில், மெட்ரோ ரயில் போன்றவற்றில் பயணம் செய்யக்கூடிய புதிய முறை அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்தின் மூலம் நகரில் போக்குவரத்தை மேம்படுத்துதல் குறித்த கருத்தரங்கம் சென்னை சர்வதேச மைய அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் மெட்ரோ ரெயில் நிர்வாக இயக்குனர் பங்கஜ்குமார் பன்சால் கலந்துகொண்டு பேசினார்.
அப்போது சென்னை நகரில் ஷேர் ஆட்டோவில் பயணம் செய்வதற்கும், மெட்ரோ ரெயிலில் செல்வதற்கும் ஒரே கட்டணம் தான் வசூலிக்கப்படுகிறது என்றும் ஆனால் மெட்ரோ ரெயிலில் ஏ.சி.வசதியுடன் , சுற்றுச்சுழல் பாதிப்பு இல்லாமல் பாதுகாப்பாக பயணிக்க முடிகிறது என்றும் தெரிவித்தார்.
சென்னையில் 2015-ம் ஆண்டு வெள்ளம் பாதித்தபோதும் மெட்ரோ ரெயில் எந்த தடையுமின்றி இயங்கியது. அப்போது மின்தடை ஏற்பட்டிருந்தாலும் மெட்ரோ ரெயில் நிலையங்களில் தடையில்லாமல் மின்சாரம் வழங்கப்பட்டது என கூறினார்..
அண்ணாசாலையில், சைதாப்பேட்டை முதல் டி.எம்.எஸ். வரையிலான சுரங்கம் அமைக்கும் பணி மார்ச் மாதம் நிறைவடையும் என்று தெரிவித்த பங்கஜ்குமார் மெட்ரோ ரெயில் 2-வது கட்ட திட்டப்பணிகள் மாதவரம்-சிறுசேரி, ஆயிரம்விளக்கு-கோயம்பேடு, மாதவரம்-சோழிங்கநல்லூர் ஆகிய வழித்தடங்களில் மொத்தம் 107.55 கி.மீ. தூரத்துக்கு மெட்ரோ ரெயில் பாதை அமைப்பதற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கிவிட்டதாக கூறினார்.
சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் வணிக வளாகத்துடன் கூடிய மிகப்பெரிய சுரங்கப்பாதை வாகன நிறுத்தம் அமைக்கப்பட்டுள்ளது என அவர் கூறினார்.
சென்னையில் மாநகர பஸ்கள், மின்சார ரெயில்கள், மெட்ரோ ரெயில்களில் ஒரே டிக்கெட் மூலம் பயணிப்பதற்கு ஏற்றவகையில் தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருவதாகவும், வெகுவிரைவில் இந்த திட்டம் அமலுக்கு வர உள்ளது என்றும் பங்கஜ்குமார் தெரிவித்தார்.