நீட் பலி வாங்கிய 3-வது உயிர்...! பண்ருட்டியில் சோகம்!
தனது மகளை நீட் தேர்வு எழுதுவதற்கு புதுச்சேரிக்கு அழைத்து வந்த பண்ருட்டியைச் சேர்ந்த ஸ்ரீனிவாசன் (52), மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நீட் தேர்வுக்காக இதுவரை 3 உயிர்கள் பறிபோன சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நீட் தேர்வு எழுதுவதற்காக தனது மகனை கேரள மாநிலம் எர்ணாகுளம் அழைத்துச் சென்ற கிருஷ்ணசாமி என்பவர் அங்கு திடீர் என ஏற்பட்ட மாரடைப்பால் உயிரிழந்தார். தனது மகளை நீட் தேர்வு எழுதுவதற்காக மதுரை அழைத்து வந்த சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியைச் சேர்ந்த கண்ணன் என்பவரும் நேற்று மாரடைப்பால் உயிரிழந்தார்.
நீட் தேர்வு அலைக்கழிப்பு காரணமாகத்தான், இவர்களுக்கு மாரடைப்பு ஏற்பட்டது என்று பல்வேறு கட்சி தலைவர்கள் குற்றம் சாட்டி வந்தனர்.
நீட் தேர்வே வேண்டாம் என தமிழகம் முழுவதும் கொந்தளித்துக் கொண்டிருக்கும் நிலையில், மத்திய அரசின் பிடிவாதம் காரணமாகவே அடுத்தடுத்து 2 உயிர்களை பலி வாங்கியுள்ளது என்று குற்றம் சாட்டப்பட்டது.
இந்த நிலையில், நீட் தேர்வு எழுதுவதற்காக, புதுச்சேரிக்கு மகளுடன் வந்த ஒருவருக்கு நேற்று மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று மதியம் அவர் உயிரிழந்தார்.
பண்ருட்டி அங்குசெட்டிப்பாளையத்தைச் சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மகள் சுவாதி. சீனிவாசன், மேல் மருவத்தூர் ஆதிபராசக்தி கல்லூரியில் பணிபுரிந்து வந்துள்ளார். நீட் தேர்வுக்காக மகள் சுவாதியுடன் புதுச்சேரி, வேல்ராம்பட்டில் உள்ள சாரதா கங்காதரன் கல்லூரிக்கு வந்துள்ளார்.
தேர்வு முடிந்தவுடன் மகளுடன் வந்த சீனிவாசன், நெஞ்சு வலிப்பதாக கூறிய நிலையில் திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதனை அடுத்து அருகில் இருந்தோர் அவரை மீட்டு புதுச்சேரி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், சீனிவாசன், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நீட் தேர்வுக்காக இதுவரை 3 உயிர்கள் பறிபோன சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
புதுச்சேரி அரசு மருத்துவமனையில் உயிரிழந்த அவரது உடல் அவரது சொந்த ஊருக்கு எடுத்துச்செல்லப்பட்டது.