கிலோ 100 ரூபாயைத் தொட்ட தக்காளி… விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க செல்லூர் ராஜு உறுதி…
கடுமையான விலை உயர்வை சந்தித்துள்ள தக்காளி மற்றும் சின்ன வெங்காயத்தின் விலையை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக சட்டப் பேரவையில் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்தார்.
தமிழக சட்டப் பேரவையில் இன்று கேள்வி நேரத்தின் போது பேசிய திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தக்காளி, சின்ன வெங்காயத்தின் விலை கிலோ 100 ரூபாய் வரை விற்கப்படுகிறது. எனவே அரசின் கூட்டுறவு அங்காடிகள் மூலமாக விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படுமா என கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்துப் பேசிய கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு, அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம் ஏற்படும்போது, அந்த பொருட்களின் விலையை குறைக்க மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா, 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து நிதியம் ஒன்றை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்தார்.
கடந்த ஆண்டு பெரிய வெங்காயத்தின் விலை அதிகமாக இருந்தபோது அந்த நிதியத்தில் உள்ள நிதி மூலம் வெங்காயத்தை வாங்கி பண்ணை பசுமை காய்கறி கடைகள் மூலம் குறைந்த விலையில் பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட்டதாகவும் தெரிவித்தார்.
தற்போது தக்காளி, சின்னவெங்காயத்தின் வரத்து குறைவாக உள்ளதாகவும், பண்ணை பசுமை காய்கறி கடைகளில் ஒரு கிலோ சின்ன வெங்காயம் 40 ரூபாய்க்கு விற்கப்படுவதாகவும் தெரிவித்தார்.
இதேபோல் சின்னவெங்காயம், தக்காளியின் விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் செல்லூர் ராஜு உறுதியளித்தார்.