பழைய 500, 1000 நோட்டுக்களுடன் கலெக்டரை சந்தித்த மூதாட்டி
வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் கீரை குட்டை கிராமத்தை சேர்ந்தவர் நாராயணன். இவரது மனைவி கமலா (80). இவர்களுக்கு பிள்ளைகள் இல்லை. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நாராயணன் இறந்துவிட்டார். இதையடுத்து கமலா, கீரை வியாபாரம் செய்து பிழைத்து வருகிறார்.
இந்நிலையில் கமலா, நேற்று மதியம் வேலூர் கலெக்டர் அலுவலகம் சென்றார். அங்கு கலெக்டர் ராமனை சந்தித்து, ஒரு கோரிக்கை மனு கொடுக்க காத்திருந்தார். ஆனால், அங்கிருந்த அதிகாரிகள், அவரை அனுமதிக்கவில்லை.
அவரிடம் விசாரித்தபோது, 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் ரூ.8 ஆயிரம் வைத்திருந்தார். அப்போது, அவர் கூறுகையில், எனது கணவர் இறந்து விட்டார். ஆதரவின்றி தவிக்கிறேன். கீரை விற்று கொஞ்சம் கொஞ்சமாக ரூ.8 ஆயிரத்தை சேர்த்து வைத்து இருந்தேன்.
பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்பது எனக்கு தற்போது தான் தெரியவந்தது. அந்த பணத்துடன் காலையில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கிளைக்கு சென்றேன். வங்கி ஊழியர்கள் அந்த பணத்தை வாங்க மறுத்து விட்டனர்.
இதனால், கலெக்டரை சந்தித்து மாற்றிச் செல்லலாம் என வந்தேன். கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் மனு எழுதி கொடுப்பவரிடம் கூறினேன். அவர் மூலம் கலெக்டருக்கு மனு எழுதி வந்தேன். பணத்தை மாற்றி கொடுங்கள் என கூறி கண் கலங்கி நின்றார்.
500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு ரிசர்வ் வங்கியின் அவகாசம் கடந்த டிசம்பர் மாதம் முடிந்துவிட்டது. தற்போது, வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்களுக்கு மட்டும், மாற்றி கொள்ள வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
தற்போது சாதாரண மக்கள் பழைய ரூபாய்களை வைத்திருந்தால், சட்டப்படி குற்றம். அவர்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
தற்போது பழைய ரூபாய் நோட்டுகளை வைத்துள்ள கமலா கைது செய்யப்படுவாரா அல்லது, கலெக்டரின் பரிந்துரைப்படி பணம் மாற்றி கொடுக்கப்படுமா என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.