ockhi storm in south tamilnadu

வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது இன்று காலை 8.30 மணியளவில் மேலும் வலுப்பெற்று புயலாக உருவானது. இதற்கு ”ஒகி” எனப் பெயரிடப்பட்டுள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இந்தப் புயல் தற்போது கன்னியாகுமரிக்கு தெற்கே சுமார் 60 கி.மீ. தொலைவில் நிலைகொண்டுள்ளது. இதன் காரணமாக மணிக்கு சுமார் 65 கி.மீ., முதல் 75 கி.மீ., வரை பலத்த காற்று வீசும் என வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. 

அடுத்த 24 மணி நேரத்தைப் பொருத்தவரை, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் தஞ்சாவூர், திருவாரூர் போன்ற டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடல் சீற்றத்துடன் காணப்படும் என்பதால் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் மீனவர்கள் அடுத்த 24 மணி நேரத்துக்கு கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

இந்நிலையில், இந்த புயலுக்கு ஓகி என பெயரிடப்பட்டதன் பின்னணி, மிகவும் சுவாரஸ்யமானது.

ஓகி என பெயரிட்டது ஏன்..?

தென்கிழக்கு வங்கக்கடலில் கடந்த மே மாதம் உருவாகி வங்கதேசத்தை உலுக்கிய புயல் மோரா. இதற்கு தாய்லாந்து மொழியில், கடல்களின் நட்சத்திரம் என்பது பொருளாகும். ஒவ்வொரு நாடும் புயலுக்கு பெயர் சூட்டும் மரபு அடிப்படையில் தாய்லாந்து இந்த பெயரை சூட்டியிருந்தது.

இதையடுத்து அடுத்ததாக அந்த மண்டலத்தில் உருவாகும் புயலுக்கு பெயர் சூட்டும் உரிமையை தாய்லாந்து பெற்றிருந்தது. எனவே அப்போதே அந்த மண்டலத்தில் அடுத்து உருவாகும் புயலுக்கு “ஓகி” என பெயரிடுவதாக அந்நாடு அறிவித்தது.

அதனடிப்படையில், அந்த மண்டலத்தில் அதன்பிறகு தற்போது உருவாகியுள்ள புயலுக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி, ஓகி என பெயரிடப்பட்டுள்ளது.