ஜல்லிக்கட்டு போட்டி நடத்த தமிழக அரசு கொண்டு வந்த அவசரச் சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மத்திய அமைச்சர் மேனகா காந்தி தரப்பில் வழக்கு ஏதும் தொடரப்படவில்லை என்று பீப்பிள்ஸ் பார் அனிமல்ஸ் அமைப்பு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

ஜல்லிக்கட்டுப்போட்டிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி கடந்த 6 நாட்களாக தொடர்ந்து இளைஞர்கள், மாணவர்கள் தன்னெழுச்சியாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இதைத்தொடர்ந்து, தமிழ அரசு மத்தியஅரசிடம் கலந்து ஆலோசித்து, அவசரச்சட்டத்தை கொண்டு வந்து ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த வழிவகை செய்தது. ஆனால், இது தற்காலிகமான சட்டம், நிரந்தரச் சட்டம் தேவை என்று மாணவர்கள், இளைஞர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தினர்.

இதையடுத்து போராட்டக்காரர்களை போலீசார் வலுக்கட்டாயமாக சில இடங்களில் அடிதடி நடத்தியும் கலைத்து வருகின்றனர். இதனால், பல இடங்களில் வன்முறை வெடித்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

இதற்கிடையே, பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த மத்திய அமைச்சர் மேனகா காந்தி, ஜல்லிக்கட்டு போட்டிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ததாக செய்திச் சேனல்கள், இணையதளங்களில் செய்தி வெளியானது. இதனால், நிலைமை மேலும் பதற்றமானது.

இந்தசூழலில், மேனகா காந்தி தரப்பில் எந்தவிதமான மனுவும் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படவில்லை என்று 
பீப்பிள்ஸ் பார் அனிமல்ஸ் அமைப்பு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. 
இது குறித்து அந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது-

ஜல்லிக்கட்டு தொடர்பாக தமிழக அரசு கொண்டு வந்த அவசரச்சட்டத்தை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் பீப்பிள்ஸ் பார் அனிமல்ஸ் தரப்பில் மனு செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின. ஆனால், இது தவறான செய்தி, யாரோ விஷமத்தனமாக பரப்பிய செய்தியாகும். தமிழக மக்களை தவறாக வழிநடத்துவதற்காக, சிலசேனல்கள் இதுபோன்ற செய்திகளை ஒளிபரப்பி வருகின்றன.

பீப்பிள்ஸ் பார் அனிமல்ஸ் அமைப்பு சார்பில் ஜல்லிக்கட்டை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் எந்தவிதமான மனுவும் தாக்கல் செய்யப்படவில்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறோம். இந்த விசயத்தில், பரவும் வீண் வதந்திகளை மக்கள் யாரும் நம்ப வேண்டாம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.