North indian group pushed the ticket examiner from running train
வேலூர்
ஓடும் இரயிலில் இருந்து வடமாநில கும்பலைச் சேர்ந்த ஆறு பேர் டிக்கெட் பரிசோதகரை கீழே தள்ளிவிட்டனர். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
யஸ்வந்த்பூரில் இருந்து அவுரா செல்லும் விரைவு இரயில், நேற்று காலை வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை வழியாக காட்பாடிக்கு வந்துக் கொண்டிருந்தது. இந்த இரயிலில் டிக்கெட் பரிசோதகராக பெங்களூருவைச் சேர்ந்த சந்தோஷ்குமார் (36) பணியில் இருந்தார்.
பயணிகளிடம் அவர் டிக்கெட் பரிசோதனை செய்து கொண்டிருந்தார். காட்பாடி- லத்தேரி இடையே இரயில் வந்தபோது ஒரு முன்பதிவு பெட்டியில் வடமாநிலத்தைச் சேர்ந்த ஆறு பேர் பயணம் செய்தனர். அவர்களின் டிக்கெட்டுகளை காட்டுமாறு சந்தோஷ்குமார் கேட்டுள்ளார்.
ஆனால், அவர்களிடம் டிக்கெட் இல்லை. முன்பதிவு பெட்டியில் ஒட்டப்பட்டிருந்த பயணிகளின் பட்டியலிலும் அந்த ஆறு பேரின் பெயர்கள் இல்லை.
இதுகுறித்து, சந்தோஷ்குமார் கேட்டபோது, அந்த வடமாநில கும்பல் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு சந்தோஷ்குமாரை வலுவாக தாக்கினர்.
இந்த நிலையில், இரயில் சென்று கொண்டிருந்தபோது அந்த வடமாநில கும்பல், சந்தோஷ்குமாரை இரயிலில் இருந்து கீழே தள்ளி விட்டது. இதில் சந்தோஷ்குமார் கீழே விழுந்து பலத்த காயமடைந்தார். அதற்குள் காட்பாடி இரயில் நிலையத்திற்கு இரயில் சென்றது.
உடனே அந்த வடமாநில கும்பலைச் சேர்ந்த ஆறு பேரும் அந்தபெட்டியில் இருந்து இறங்கி வேறு பெட்டிக்கு மாறிச் சென்றுவிட்டனர். கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்த சந்தோஷ்குமார் காட்பாடி இரயில் நிலையத்திற்கு சென்று இரயில்வே காவலாளர்களிடம் புகார் கொடுத்தார்.
இதுகுறித்து வழக்குப்பதிந்த இரயில்வே காவலாளர்கள் டிக்கெட் பரிசோதகரை தாக்கியும், இரயில் இருந்து தள்ளியும் விட்டு தப்பிச்சென்ற வடமாநில கும்பலை சேர்ந்த ஆறு பேரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
