New problem for Vijay Sethupathi film Do not stigmatize the name
இராமநாதபுரம்
நடிகர் விஜய்சேதுபதி நடிக்கும் புதிய படமான சீதக்காதி திரைப்படத்திற்கு அதன் தலைப்பால் புது சிக்கல் எழுந்துள்ளது. ஊரே போற்றியவரின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்திடாமல் காட்சிகளை அமையுங்கள் என்று படக்குழுவுக்கு கீழக்கரை மக்கள் நல பாதுகாப்பு கழக செயலாளர் முகைதீன் இப்ராகிம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நடிகர் விஜய் சேதுபதி தற்போது நடித்து வரும் புதிய படத்திற்கு "சீதக்காதி" என்று பெயரிடப்பட்டு உள்ளது. "நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம்" படத்தின் இயக்குனர் பாலாஜி தரணிதரன் இந்தப் படத்தை இயக்குகிறார்.
விஜய் சேதுபதியின் அனைத்து படங்களும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் என்பதால் இந்தப் படமும் அந்த வரிசையில் இணைந்துவிட்டது.
இந்த நிலையில், சீதக்காதி படத்துக்கு புது சிக்கல் ஒன்று வந்துள்ளது. திரைப்படத்தின் தலைப்புதான் சர்ச்சையை ஏற்படுத்தி சிக்கல் உண்டாக்கியுள்ளது.
"சீதக்காதி" என்ற பெயர் இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் பெரும் வள்ளலாக வாழ்ந்து மறைந்த வள்ளல் சீதக்காதி பெயரால் உள்ளதால் அவரின் வாழ்க்கை தொடர்பான திரைப்படம் என்ற வதந்தி பரவி வருகிறது.
மற்ற பகுதிகளை காட்டிலும், கீழக்கரை பகுதியில் சீதக்காதி திரைப்பட தலைப்பு குறித்த சர்ச்சை அதிகளவில் எழுந்துள்ளது.
இந்த நிலையில் இதுகுறித்து கீழக்கரை மக்கள் நல பாதுகாப்பு கழக செயலாளர் முகைதீன் இப்ராகிம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "நடிகர் விஜய்சேதுபதி நடிக்க சீதக்காதி என்ற பெயரிடப்பட்டுள்ள திரைப்படம் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
சீதக்காதி என்பவர் கீழக்கரை மட்டுமல்லாது உலகளவில் வள்ளல் சீதக்காதி என்று பெயர் பெற்றவர். இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதியின் உயிர் நண்பரான சீதக்காதியின் புகழ் என்றும் மறையாது என்பதற்கு ஏற்ப வாழும் வள்ளலாக வாழ்ந்தவர். அவர் வாரி வழங்கிய நிலங்களும், அதில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களும் என்றும் அவரின் பெயர் சொல்லும்.
மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக அனைவரிடமும் அன்பாக இருந்தவர். முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் நெருங்கிய நண்பராக திகழ்ந்தவர் சீதக்காதி. அவரின் மேல்கொண்ட அன்பால் அவர் நடித்த திரைப்படத்தில் சீதக்காதி குறித்து பெருமையாக பாடியுள்ளார். அந்த அளவிற்கு இந்த மண்ணின் மீதும், இந்த மக்களின் மீதும் அன்பு கொண்டு வாரி வழங்கியவர். அவரின் பெயரால் எடுக்கப்பட்டு வரும் இந்த புதிய திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
சீதக்காதி திரைப்படம் மேடைக் கலைஞனின் வாழ்க்கையை சித்தரிக்கும் வகையில் படமாக்கப்படுவதாக இயக்குனர் தரப்பில் கூறப்பட்டிருந்தாலும் சீதக்காதி என்றால் அனைவருக்கும் நினைவிற்கு வருவது கீழக்கரை வள்ளல் சீதக்காதிதான். இதனால் மக்கள் மத்தியில் அதிகளவில் எதிர்பார்ப்பு ஏற்படும்.
எனவே, இதனை மனதில் கொண்டு படத்தில் சீதக்காதி என்ற பெயருக்கு சிறிதும் களங்கம் ஏற்படாமல் காட்சிகளை கவனமாக அமைக்க வேண்டும். இது ஒட்டுமொத்த படக் குழுவினருக்கும் உள்ள கடமையாகும்" என்று அதில் கூறியுள்ளார்.
