நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் - பல்வேறு அரசியல் கட்சிகள் ஆர்ப்பாட்டம்...
பெரம்பலூர்
நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க கோரும் மசோதாவிற்கு குடியரசு தலைவரின் ஒப்புதல் கோரி பெரம்பலூரில் தி.மு.க மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மருத்துவ கல்லூரிகளில் சேருவதற்கான நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க கோரும் மசோதாவிற்கு குடியரசு தலைவரின் ஒப்புதல் கோரி பெரம்பலூர் புதிய பேருந்து நிலைய பகுதியில் பெரம்பலூர் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் தங்கராசு தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் அண்ணாதுரை வரவேற்று பேசினார்.
பெரம்பலூர் மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜேந்திரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் செல்லதுரை, ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் துரைராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மருத்துவர் கருணாகரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், "தமிழக அரசின் பிளஸ்-2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றபோதும் நீட் தேர்வினால் மருத்துவ படிப்பில் சேர முடியாமல் மாணவ, மாணவிகள் அடையும் பாதிப்புகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.
மேலும், நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டும்,
தேசிய மருத்துவ ஆணையம் உருவாக்குவதை கைவிட வேண்டும்,
அரசு மருத்துவர்களுக்கு உயர் மருத்துவ கல்வியில் 50 சதவித இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்" உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
நீட் தேர்வு விவகாரத்தின் மௌனம் காத்து வரும் மத்திய - மாநில அரசுகளை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், நகரத் தலைவர் ஆறுமுகம் உள்பட திராவிடர் கழக நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் ஆலத்தூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி உள்பட தி.மு.க.வினர், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் உள்பட பல்வேறு அரசியல் கட்சியினரும் கலந்து கொண்டனர்.