"தமிழகத்தில் நீட் தேர்வு கண்டிப்பாக நடைபெறும்" - மத்திய அமைச்சர் திட்டவட்டம்
தமிழகத்தில் கண்டிப்பாக நீட் தேர்வு நடைபெறும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா திட்டவிட்டமாக தெரிவித்துள்ளார்.
மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று அனைத்து அரசியல் கட்சிகளும் ஓரணியில் திரண்டு வலியுறுத்தி வருகின்றன. இது தொடர்பாக தமிழக சட்டமன்றத்தில் சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது. ஆனால் இதுநாள் வரை இச்சட்டதிருத்தத்திற்கு பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளிக்கவில்லை.
நீட் சட்டத்தால் கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும்,எனவே நீட்டில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்றும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டாவை, விஜயபாஸ்கர் அண்மையில் சந்தித்து பேசி வலியுறுத்தினார்.
இந்தச் சூழலில் நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கப்படாது என்று ஜே.பி. நட்டா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் கண்டிப்பாக நீட் தேர்வு நடைபெறும் என்றும், கிராமப்புற மாணவர்களுக்கு தேர்வில் சிறப்பு ஒதுக்கீடு வழக்க தமிழக அரசை வலியுறுத்தி உள்ளதாகவும் கூறினார்.