நீட் வினாத்தாளை ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்து தர வேண்டும் - உயர்நீதிமன்றம் உத்தரவு
நீட் தேர்வு விவகாரத்தில் பிறமொழி வினாத்தாளை ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்து தாக்கல் செய்ய வேண்டும் என மனுதாரருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
புதுக்கோட்டையை சேர்ந்த ஜொரோபா என்ற மாணவி நீட் தேர்வில் இந்தி, குஜராத்தி, மராத்தி வினாத்தாள்கள் எளிமையாக இருந்ததாகவும், நீட் தேர்வை ரத்து செய்துவிட்டு +2 மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ சேர்க்கையில் மாணவர்களை தேர்வு செய்ய வேண்டும் எனவும் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுதாக்கல் செய்தார்.
இதுகுறித்த வழக்கு இன்று உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் இந்தி, குஜராத்தி, மராத்தி ஆகிய நீட் வினாத்தாளை மொழி பெயர்த்து ஜூன் 12 ஆம் தேதிக்குள் தர வேண்டும் எனவும், இதுகுறித்து மத்திய மாநில அரசுகள் பதிலளிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டது.
மேலும், இதுகுறித்து உள்ள மற்ற வழக்குகளுடன் இந்த வழக்கும் சேர்ந்து விசாரிக்கப்படும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.