சென்னையில் நீட் மற்றும் ஐ.ஐ.டி. பயிற்சி மையம் மாணவர்களிடம் கோடிக்கணக்கில் பணம் வசூலித்து மோசடி செய்துள்ளது. பெற்றோர்களின் புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தலைமையகத்தின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டதால் மையங்கள் மூடப்பட்டதாக கூறப்படுகிறது.
நீட் தேர்வு- பயிற்சி மையம்
மருத்துவ படிப்பில் சேருவதற்கு நீட் தேர்வு கட்டாயமாகும். இதன் காரணமாக ஏழை எளிய மாணவர்களால் நீட் தேர்விற்கு தயாராக முடியாது என்ற காரணத்தால் தமிழகம் முழுவதும் நீட் தேர்விற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. இருந்த போதும். நீட் தேர்வு தற்போது வரை நடைமுறையில் உள்ளதால், வசதி படைத்த மாணவர்கள் நீட் பயிற்சி மையத்தில் லடசக்கணக்கில் பணத்தை கொட்டிக்கொடுத்து பயிற்சி மேற்கொண்டு வருகிறார்கள். அந்த வகையில் தமிழகத்தில் பல்வேறு மாட்டங்களில் பயிற்சி மையங்கள் செயல்படுகிறது. இந்த நிலையில் சென்னையில் செயல்பட்டு வந்த பயிற்சி மையம் மாணவர்களிடம் கோடிக்கணக்கில் பணத்தை பெற்றுக்கொண்டு பயிற்சி மையத்தை மூடி சென்றுள்ளதாக போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
லட்சத்தில் கொட்டி கொடுத்த மாணவர்கள்
பிரபல தனியார் மையம் ஒன்று நீட் மற்றும் ஐ.ஐ.டி. தேர்வுக்கு பயிற்சி அளித்து வருகிறது. இந்த மையம் சார்பில் பெற்றோர்களிடம் இருந்து கோடிக்கணக்கில் பண வசூலும் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் திடீரென மையத்தை மூடியதால் பாதிக்கப்பட்ட பெற்றோர்கள் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். தமிழ்நாடு மற்றும் கேரளாவில் செயல்பட்டு வரும் தனியார் பயிற்சி மையத்தின் தலைவர் அங்கூர் ஜெயின் மற்றும் இயக்குனர்கள் மீதும் கீழ்பாக்கம் தனியார் மையக் கிளை மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 140-க்கும் மேற்பட்ட பெற்றோர்களிடம் சுமார் ரூ.4 கோடிக்கு மேல் வசூல் செய்து மோசடி செய்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் இது தொடர்பாக சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளித்த புகாரின் பேரில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
பயிற்சி மையம் மூடல் பெற்றோர்கள் அலறல்
தனியார் பள்ளிகளுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு ஒருங்கிணைந்த பயிற்சி என்ற அடிப்படையில் பெற்றோர்களிடம் பண வசூலில் ஈடுபட்டு மோசடி அரங்கேறி இருக்கிறது. கீழ்ப்பாக்கம் உள்பட பல இடங்களில் செயல்பட்டு வந்த மையங்கள் மூடப்பட்டு உள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் புகார் தெரிவித்து உள்ளனர். டெல்லியில் தனியார் பயிற்சி மைய தலைமையகத்தின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டதால் ஆசிரியர்களுக்கு பணம் கொடுக்க முடியாத சூழ்நிலையில் திடீரென மையங்கள் மூடப்பட்டது தெரிய வந்து உள்ளது. தமிழகத்தில் சென்னை மற்றும் கோவையில் 6 மையங்கள் செயல்பட்டதாகவும கூறப்படுகிறது.


