கடைசி விவசாயி படக்குழுவினருக்கு பாராட்டு தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின், தேசிய விருதில் மலிவு அரசியல் கூடாது எனவும் சாடியுள்ளார்
மத்திய அரசு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் தேசிய திரைப்பட விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், 69ஆவது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சிறந்த பிராந்திய மொழி திரைப்படங்களுக்கான பிரிவில் சிறந்த தமிழ் படத்திற்கான விருதினை ‘கடைசி விவசாயி’ படம் பெற்றுள்ளது. சிறந்த பாடகிக்கான விருதினை “இரவின் நிழல்” திரைப்படத்திற்காக ஸ்ரேயா கோஷல் பெற்றுள்ளார். இந்த படத்தினை பார்த்திபன் இயக்கி நடித்திருந்தார். குறும்படத்திற்கான சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதினை ஸ்ரீகாந்த் தேவா பெற்றுள்ளார்.
சிறந்த திரைப்படத்திற்கான விருது நடிகர் மாதவன் இயக்கி நடித்த ராக்கெட்ரி திரைப்படத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், தேசிய ஒருமைப்பாடு குறித்த சிறந்த திரைப்படத்திற்கான நர்கீஸ் தத் விருதானது, சர்ச்சைக்குரிய காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கடைசி விவசாயி படக்குழுவினருக்கு பாராட்டு தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின், தேசிய விருதில் மலிவு அரசியல் கூடாது என காஷ்மீர் ஃபைல்ஸ் படத்திற்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளதை சாடியுள்ளார்.
இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “69ஆவது தேசிய திரைப்பட விருதுகளில் தமிழில் சிறந்த படமாகத் தேர்வாகியிருக்கும் கடைசி விவசாயி படக்குழுவினருக்கு என் பாராட்டுகள்!
ஆந்திர மாநிலத்தில் விஜயநகர பொற்காசுகள் கண்டெடுப்பு: இந்திய தொல்லியல் துறை தகவல்!
மேலும், இரவின் நிழல் படத்தில் ‘மாயவா சாயவா’ பாடலுக்காகச் சிறந்த பின்னணிப் பாடகி விருதை வென்றுள்ள ஸ்ரேயா கோசல், கருவறை ஆவணப்படத்துக்காகச் சிறப்புச் சான்றிதழ் வென்றுள்ள இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, சிறந்த கல்வித் திரைப்படத்துக்கான பிரிவில் விருதுக்குத் தேர்வாகியுள்ள சிற்பிகளின் சிற்பங்கள் படக்குழுவினர் ஆகிய அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று பதிவிட்டுள்ளார்.
அதேசமயம், சர்ச்சைக்குரிய திரைப்படம் என நடுநிலையான திரைவிமர்சகர்களால் புறக்கணிக்கப்பட்ட திரைப்படத்துக்குத் தேசிய ஒருமைப்பாட்டுக்கான நர்கீஸ் தத் விருது அறிவிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
“இலக்கியங்கள், திரைப்படங்களுக்கு அளிக்கும் விருதுகளில் அரசியல் சார்புத்தன்மை இல்லாமல் இருப்பதுதான் அந்த விருதுகளைக் காலங்கடந்தும் பெருமைக்குரியவையாக உயர்த்திப் பிடிக்கும். மலிவான அரசியலுக்காகத் தேசிய விருதுகளின் மாண்பு சீர்குலைக்கப்படக் கூடாது” எனவும் முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
