natarajan liver transplant mystery

கல்லீரல் மற்றும் சிறுநீரகம் செயலிழப்பால் உயிருக்குப் போராடி வந்த நடராஜனுக்கு மூளைச்சாவு அடைந்த ஏழை இளைஞர் ஒருவரின் கல்லீரல் மற்றும் சிறுநீரகத்தைப் பொருத்தி அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்றதாக குளோபல் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது.

புதுக்கோட்டை மாவட்டம் கூத்தாடிவயல் என்ற கிராமத்தைச் சேர்ந்த ஏழை கூலித்தொழிலாளி கார்த்திக். விபத்தில் சிக்கி தலையில் அடிபட்டதால் தஞ்சாவூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கார்த்திக், சென்னை குளோபல் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டது தொடர்பாக பல்வேறு கேள்விகள் எழுகின்றன.

குளோபல் மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையின் மூலம் எழும் கேள்விகள்:

1. ஏழை கூலித்தொழிலாளியான கார்த்திக்கின் குடும்பத்தினர், குளோபல் மருத்துவமனையில் வைத்து கார்த்திக்கிற்கு மேல்சிகிச்சை செய்யத் துணிந்தது எப்படி?

2. அதற்கான பணவசதி இல்லாதபோது கார்த்திக்கை குளோபல் மருத்துவமனைக்கு எப்படி அழைத்து சென்றனர்?

3. உயிரை காப்பாற்ற வேண்டும் என்ற வேட்கையில் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றிருக்கலாம். ஆனால் கல்லீரலும் சிறுநீரகமும் எப்போது கிடைக்கும் என ஏங்கிக் கொண்டிருக்கும் நடராஜன் அனுமதிக்கப்பட்டுள்ள அதே குளோபல் மருத்துவமனைக்கு சென்றது எப்படி?

4. அது எதேச்சையாக நடந்ததா? அல்லது கார்த்திக் திட்டமிட்டு குளோபல் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டாரா?

5. அப்படியென்றால் கார்த்திக்கை குளோபல் மருத்துவமனைக்கு செல்ல பரிந்துரை செய்தது யார்? 

6. அப்படி பரிந்துரை செய்தவர், எத்தனையோ மருத்துவமனைகள் இருந்தும் என்ன காரணத்திற்காக குளோபல் மருத்துவமனையை பரிந்துரையை செய்தார்? குளோபல் மருத்துவமனையை பரிந்துரை செய்து அங்கு அழைத்து செல்வதால் அவருக்கு என்ன லாபம்?

7. கார்த்திக் உண்மையாகவே மூளைச்சாவு அடைந்தாரா? அல்லது மூளைச்சாவு அடைய வைக்கப்பட்டாரா?

இந்த கேள்விகளுக்கு பதில் காணும் நோக்கில், கார்த்திக்கின் நண்பர்களைத் தொடர்பு கொண்டு கேட்டபோது அவர்கள் கூறியதாவது:

கடந்த மாதம் 30-ம் தேதி கார்த்திக்கின் பைக் மீது அதிவேகமாக சென்ற கார் மோதியது. இந்த விபத்தில் தலையில் பலத்த காயமடைந்த கார்த்திக், அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு போதிய மருத்துவ வசதிகள் இல்லாததால் பின்னர் புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கும் அதன்பிறகு தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கும் கார்த்திக் அழைத்து செல்லப்பட்டார்.

கார்த்திக்கிற்கு தஞ்சாவூர் அரசு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். தொடர்ந்து சிகிச்சை அளித்தபோதிலும் கார்த்திக்கின் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை. பின்னர் கார்த்திற்கு ஸ்கேன் எடுத்தோம். ஸ்கேனை பார்த்த மருத்துவர்கள், அவரது தலையில் பலமாக அடிபட்டிருப்பதால் இரத்தம் உறைந்துவிட்டது. மூளைச்சாவு அடைந்துவிட்டார். உயிர் மட்டும் இருக்கும். ஆனால் சுயநினைவு எதுவும் இருக்காது என கூறிவிட்டனர். இனிமேல் அவரைக் காப்பாற்றுவது கடினம். எங்களால் இங்கு ஒன்றும் செய்ய முடியாது என தெரிவித்துவிட்டனர்.

இதையடுத்து எங்களுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. அப்போது அங்கு இருந்த ஒரு வழக்கறிஞர், விபத்தில் சிக்கி சிகிச்சைக்கு வருபவர்களுக்கு இன்சூரன்ஸ் மூலம் பணம் பெற்றுத் தருவதே அவரின் வேலை எனக்கூறி எங்களுக்கும் இன்சூரன்ஸ் மூலமாக பணம் வாங்கித் தருவதாகக் கூறினார். மேலும் மேல்சிகிச்சைக்காக சென்னைக்கு அழைத்து செல்வதாகவும் அனைத்து செலவுகளையும் ஏற்றுக்கொள்வதாகவும் கூறினார். இன்சூரன்ஸ் மூலம் பணத்தை பெற்றுத்தந்தவுடன், சிகிச்சைக்கு செய்த செலவையும் கமிஷனையும் தந்தால் போதும் என கூறினார். அவரை கார்த்திக்கின் பெற்றோரும் நாங்களும் நம்பினோம்.

அதேபோல் தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் இருந்த மருத்துவர் ஒருவரும் சென்னைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளிக்கும்படி அறிவுறுத்தினார். நாங்களும் கார்த்திக்கிற்கு சிகிச்சை அளிக்கப்படும் என்பதால் ஒப்புக்கொண்டோம். அவர்களே ஆம்புலன்ஸ் மூலம் சென்னைக்கு அனுப்பிவைத்தனர். குளோபல் மருத்துவமனையில் கார்த்திக்கிற்கு மூளைச்சாவு ஏற்பட்டதாகக் கூறினர். உயிர் மட்டுமே இருக்கும் என மருத்துவர்கள் கூறிவிட்டதால் மருத்துவர்களின் ஆலோசனைப்படியும் கார்த்திக்கின் விருப்பப்படியும் உடலுறுப்புகளை தானமாக வழங்க குடும்பத்தினர் ஒப்புக்கொண்டனர்.

இவ்வாறு கார்த்திக்கின் நண்பர்கள் தெரிவித்தனர்.

சென்னைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளிக்குமாறு மருத்துவரும் சிகிச்சைக்கான செலவை ஏற்றுக்கொள்வதாக வழக்கறிஞர் ஒருவரும் தெரிவித்ததாக கார்த்திக்கின் நண்பர்கள் தெரிவித்தனர். அது சரி.. குளோபல் மருத்துவமனைக்கு பரிந்துரைத்தது யார்? என கேட்டதற்கு அவர்கள் மலுப்பலாக பதிலளித்தனர். தெளிவாக பதிலளிக்கவில்லை. 

எனவே அவர்கள் மிரட்டப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுகிறது. கார்த்திக்கிற்கு சிகிச்சை அளித்த மருத்துவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. அவர் தலைமறைவாகிவிட்டதாக கூறப்படுகிறது.

கார்த்திக்கின் நண்பர்களின் கூற்றுப்படி பார்த்தால், மருத்துவமனையில் கார்த்திக்கின் பெற்றோரிடம் வழக்கறிஞர் எனவும் அவர்களுக்கு உதவுவதாகவும் கூறி சென்னை குளோபல் மருத்துவமனைக்கு அழைத்து சென்றவர் யார்? என கண்டறிந்தால் சில மர்ம முடிச்சுகள் அவிழ்க்கப்படலாம்.