கோவில் சொத்துகள் கோவிலுக்கே என்ற உயர்நீதிமன்ற தீர்ப்பு திமுக அரசுக்கான அபாய மணி என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார். மேலும் நீதிமன்ற தீர்ப்புக்கு வரவேற்பும் தெரிவித்துள்ளார்.

பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கோவில் சொத்து கோவிலுக்கே என்ற உயர்நீதிமன்றத் தீர்ப்பு வரவேற்பிற்குரியது! கோவில் நிதியில் வணிக வளாகம் கட்டக்கூடாது என்று திமுக அரசுக்குச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது மிகுந்த மகிழ்ச்சியையும் நிம்மதியையும் அளிக்கிறது.

மேலும், இது குறித்துத் தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களுக்கு இந்து சமய அறநிலையத்துறை சுற்றறிக்கை அனுப்ப வேண்டுமெனவும், சுற்றறிக்கை அனுப்பத் தவறினால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறியிருப்பது மிகுந்த வரவேற்பிற்குரியது.

திருக்கோவில்களுக்குச் சொந்தமான சொத்துகளையும், பக்தர்கள் செலுத்தும் காணிக்கைகளையும் திருக்கோவில்களுக்கும் இந்து சமய வளர்ச்சிக்கும் பயன்படுத்தாமல், வணிக வளாகம் கட்டும் போர்வையில், நிதியைச் சுரண்டிய திமுக அரசுக்கான அபாய மணியே உயர்நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு என்பதில் எந்தச் சந்தேகமுமில்லை. தங்கள் தீர்ப்பின் மூலம் இந்து சமயக் கோவில்களின் நிதியைக் காத்த உயர்நீதிமன்றத்திற்குத் தமிழக மக்கள் சார்பாக நெஞ்சார்ந்த நன்றிகள்” என்று குறிப்பிட்டுள்ளார்.