கோவை கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்து வந்த டாஸ்மாக் பாரை நாம் தமிழர் கட்சியினர் அடித்து நொறுக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரையை சேர்ந்த 21 வயதான மாணவி ஒருவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இந்த மாணவி ஞாயிறு விடுமுறை தினம் என்பதால் ஒண்டிப்புதூரைச் சேர்ந்த தனது ஆண் நண்பருடன் காரில் வெளியே சென்று உள்ளார். இவர்கள் விமான நிலையத்தின் பின்புறம் உள்ள பிருத்தாவன் நகர் பகுதியில் காரை நிறுத்தி உள்ளனர். இரவில் 11 மணி அளவில் காரை நிறுத்தி விட்டு இருவரும் பேசிக் கொண்டு இருந்ததாக சொல்லப்படுகிறது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

அப்போது அங்கு வந்த 3 பேர் கொண்ட குழு காரின் அருகில் சென்று நோட்டமிட்டுள்ளனர். உள்ளே கல்லூரி மாணவி, தனது நண்பருடன் இருந்ததை கண்டதும், மர்ம நபர்கள் அவர்களை வெளியே வர கூறி உள்ளனர். அந்த கும்பலின் நடவடிக்கையை கண்டு அஞ்சிய மாணவியும், அவரின் நண்பரும் வெளியே வர அஞ்சி தப்பிச் செல்ல முற்பட்டு உள்ளனர். தொடர்ந்து மிரட்டிய மர்ம நபர்கள், காரை தடுத்து நிறுத்தி கண்ணாடியை உடைத்து உள்ளனர். அச்சத்துடன் ஆண் நண்பர் வெளியே வந்ததும் அவரின் தலையில் கொடுவாள் மூலம் தாக்கி உள்ளனர்.

தலையில், பலத்த அடிபட்டதும் அவர் அங்கேயே மயங்கி விழுந்து உள்ளார். அதைக் கண்டு மாணவி உயிர் பயத்தில் அஞ்சி நடுங்கி உள்ளார். உடனே, மூன்று பேர் கும்பல் கத்தி முனையில் மாணவியை மிரட்டி வலுக்கட்டாயமாக புதர் பகுதிக்குள் தூக்கிச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. மயக்கம் தெளிந்த ஆண் நண்பர் அவசர உதவி எண் 100-க்கு போன் செய்து அங்கு நடந்த அட்டூழியம் குறித்து தகவல் தெரிவித்து உள்ளார்.

உடனே விமான நிலைய பகுதி போலீசார் உஷார்படுத்தப்பட்டதும், ரோந்து பணியில் இருந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயத்துடன் இருந்த மாணவியின் ஆண் நண்பரை மீட்டு கோவை உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, போலீசார் தேடுதல் வேட்டையில் இறங்கினர். புதர் மண்டிய பகுதியில் சல்லடை போட்டு தேடியதில், ஒரு கிலோ மீட்டர் தொலைவில் மாணவி அலங்கோல நிலையில் கிடந்ததை கண்டு போலீசாரே அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

பின்னர், பாதுகாப்பாக அவரை மீட்ட போலீசார் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்து முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். கோவையை உலுக்கிய இந்த சம்பவம் தொடர்பாக பீளமேடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.

இந்நிலையில் அந்த காட்டுப் பகுதியில் கள்ளச் சந்தையில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்து வந்த டாஸ்மாக் பாரை நாம் தமிழர் கட்சியினர் அடித்து சூறையாடினர். மேலும் சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட நபரையும் பிடித்து காவல் துறை வசம் ஒப்படைத்தனர்.