mystery people theft assistant professor house who went to home town

கடலூர்

கடலூரில் விடுமுறைக்கு சொந்த ஊருக்கு சென்றிருந்த உதவிப் பேராசிரியரின் வீட்டின் கதவை உடைத்து பீரோவில் இருந்த 11 சவரன் நகைகள் மற்றும் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுவிட்டனர். 

கடலூர் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலைநகர் சி.கொத்தங்குடி பகுதியில் உள்ள அமுதசுரபி நகரில் வசிப்பவர் ராஜா (43). 

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வந்த இவர், சமீபத்தில் பரமக்குடி கல்லூரிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதனால் வீட்டை பூட்டிவிட்டு பரமக்குடி சென்று பணியாற்றி வந்தார்.

இந்த நிலையில் கடந்த 15 நாள்களுக்கு முன்பு விடுமுறையையொட்டி குடும்பத்தினருடன் சிதம்பரம் வந்து தங்கினார். பின்னர் விருதுநகரில் உள்ள கிராமத்துக்குச் சென்றுவிட்டு ஏப்ரல் 28-ஆம் தேதி சிதம்பரத்துக்கு திரும்பினார். 

அப்போது வீட்டு கதவில் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதனை அதிர்ச்சி அடைந்து வேகமாக உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 11 சவரன் நகைகள், ரூ.5000 மதிப்பிலான வெள்ளிப் பொருள்கள், ரொக்கம் ரூ.8000 திருடு போயிருந்தது தெரிந்தது. 

திருடுபோன பொருள்களின் மதிப்பு ரூ.2 இலட்சம் இருக்குமாம். இச்சம்பவம் குறித்து ராஜா சிதம்பரம் அண்ணாமலைநகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதுகுறித்து வழக்குப் பதிந்து காவலாளர்கள் விசாரித்து வருகின்றனர்.