நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள்; பீரோவை உடைத்து நகை, பணம் கொள்ளை - பீதியில் மக்கள்...
தஞ்சாவூரில், நள்ளிரவில் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் பீரோவில் இருந்த நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். மர்ம நபர்களை காவலாளர்கள் தீவிரமாக தேடி வருகின்றனர்.
தஞ்சாவூர் மாவட்டம், நாஞ்சிக்கோட்டை சாலையில் உள்ளது ஜாமல் உசேன் நகர். இங்குள்ள பாப்பாநகர் விரிவாக்கம் 2-ஆம் தெருவைச் சேர்ந்தவர் முருகானந்தம் (37). இவருடைய தந்தை இராமையன், தாயார் சேதம்மாள், மனைவி மலர்விழி, மகன் பவித்ரன்.
முருகானந்தம் சிங்கப்பூரில் வேலை செய்து வருவதால் தாய், தந்தை, மனைவி, மகன் ஒன்றாக வசித்து வருகின்றனர். நேற்று முன்தினம் ஆடி அமாவாசை என்பதால் இராமையனும், சேதம்மாளும் ஒரத்தநாட்டில் உள்ள கோயிலுக்குச் சென்றனர். இதனால் மலர்விழி தனது மகன் பவித்ரனுடன் உறவினர் ஒருவர் வீட்டில் இரவு தங்கினார்.
காலை வீட்டுக்கு வந்த மலர்விழி வீட்டில் கதவு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர், வீட்டுக்குள் சென்று பார்த்தபோது உடைந்து கிடந்த பீரோவையும், அதிலிருந்த இரண்டு சவரன் நகை மற்றும் வெள்ளி கொலுசுகள், ரூ.50 ஆயிரம் பணம் ஆகியவை திருடு போயிருந்ததைக் கண்டு நிலைகுலைந்தார்.
இதுகுறித்து செல்போனில் மாமனார், மாமியாருக்கு தகவல் கொடுத்தார். பின்னர், காவல்துறைக்கும் புகார் கொடுத்தார். புகாரின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தஞ்சை தமிழ் பல்கலைக்கழக காவலாளர்கள், "வீட்டில் யாரும் இல்லாததை அறிந்துதான் மர்ம நபர்கள் நள்ளிரவில் திருட்டில் ஈடுபட்டிருக்கலாம்" என்று சந்தேகித்தனர். இதுகுறித்து வழக்குப்பதிந்த காவலாளர்கள், கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.
வீட்டின் கதவை உடைத்து பீரோவில் இருந்த நகை, பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்ற சம்பவத்தால் இப்பகுதி மக்கள் பீதி அடைந்துள்ளனர்.