mysterious helicam in kodanad estate
கடந்த இரண்டு நாட்களாக கொடநாடு எஸ்டேட் முழுவதும் ரகசிய ஹெலிகேம் ஒன்று சுற்றிச் சுற்றி வந்த படம் எடுத்தது குறித்து நீலகிரி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட் அண்மைக் காலமாக மர்மங்கள் நிறைந்ததாக காணப்படுகிறது.
சில நாட்களுக்கு முன்பு கொடநாடு எஸ்டேட்டுக்குள் புகுந்த 11 பேர் கொண்ட கும்பல் ஒன்று அங்கிருந்த காவலாளி ஓம் பகதூரை அடித்துக் கொன்றுவிட்டு உள்ளே நுழைந்தது. பின்னர் மற்றொரு காவலாளியான கிருஷ்ண பகதூரை தாக்கியது.
படுகாயங்களுடன் அந்த கும்பலிடம் இருந்து உயர் தப்பிய அவர் சிகிச்சை பெற்று தற்போது, பணிக்கு திரும்பியுள்ளார். இந்த வழக்கில் தொடர்புடைய கேரளாவைச் சேர்ந்த மனோஜ், சந்தோஷ், தீபு, சதீசன், உதயகுமார், சங்கனாசேரியைச் சேர்ந்த சாமி ஆகியோர் கைதுசெய்யப்பட்டு, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

இந்நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ் மர்மமான முறையில் விபத்தில் பலியானார். மற்றொரு குற்றவாளியாக கருதப்படும் சயான் மர்மமான முறையில் விபத்தில் சிக்கி மருத்துமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதே போன்று கொடநாடு எஸ்டேட்டுக்குள் கோடிக்கணக்கான பணம் உள்ளது என்றும் ஜெயலலிதாவின் சொத்துக்கள் குறித்த உயில் உள்ளது என மர்மமான தகவல்கள் அவ்வப்போது உலவி வருகின்றன.
நேற்று கொட நாடு எஸ்டேட்டில் வருமான வரித்துறையினர் ரெய்டு நடத்துவதாக தகவல் வெளியானது.
இப்படி தொடர்ந்து கொடநாடு எஸ்டேட் குறித்து அண்மைக்காலமாக மர்ம தகவல்களாகவே வெளியாகி வருகின்றன.
இந்நிலையில் கடந்த 2 நாட்களாக கொடநாடு எஸ்டேட் முழுவதையும் ஹெலிகேம் ஒன்று சுற்றிச் சுற்றி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக நீலகிரி காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
