ஆணவ கொலை போராளி கவுசல்யாவுக்கு கொலை மிரட்டல்: தூக்கு தீர்ப்புக்கு பின்னும் தூங்காத சாதி வெறி...
தேசத்தையே உலுக்கிய உடுமலைப்பேட்டை சங்கர் கொலை வழக்கில் குறுகிய காலத்தில் சாட்டையடி தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பதை நாடே வரவேற்றிருக்கிறது. அதேநேரத்தில், இந்தியாவில் இந்த மாதிரியான வழக்கிற்கெல்லாம்! தூக்கு தண்டனை நிறைவேற்றப்படுமா? எனும் கேள்வி தொக்கியுள்ள சூழ்நிலையில் அடுத்தடுத்த திருப்பங்கள் உருவாக துவங்கியுள்ளன.
இந்நிலையில் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சின்னசாமி மற்றும் அன்னலட்சுமி (கவுசல்யாவின் பெற்றோர்) சார்பாக் வாதாடியவர் மூத்த கிரிமினல் வழக்கறிஞரான கோயமுத்தூர் ஜெயச்சந்திரன்.
தீர்ப்புக்குப் பின் அவர் கூறியிருக்கும் விஷயங்களான “இந்த வழக்கில் சந்தேகத்தின் பலனை அடிப்படையாக வைத்து அன்னலட்சுமி விடுதலை செய்யப்பட்டிருக்கிறார். கூட்டு சதி செய்ததாகதான் சின்னசாமி மற்றும் அன்னலட்சுமி மீது வழக்கு பதியப்பட்டிருந்தது.
சின்னசாமிக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பின் முழு விபரமும் கிடைத்த பின், தண்டனையை ரத்து செய்யவும், வழக்கிலிருந்து அவரை விடுவிக்கவும் வலியுறுத்தி ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்யப்படும்.
மேலும் அன்னலட்சுமி உள்ளிட்ட மூவர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து, கவுசல்யா தரப்பில் மேல் முறையீடு செய்வதாக தெரிவித்துள்ளார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மனுவை அளிப்போம்.” என்றிருக்கிறார்.
நாட்டையே திரும்பிப் பார்க்க வைத்த அதி முக்கியமான இந்த தீர்ப்பில் ஏற்பட்டுள்ள இந்த திருப்பங்கள் கவனிக்கப்படுகின்றன. மேலும் இந்த தீர்ப்பு சின்னச்சாமி தரப்புக்கு மிக மிக பாதகமாக வந்துள்ளதால் கவுசல்யாவுக்கு அவரை சார்ந்தவர்களுக்கும் கொலை மிரட்டல்கள் தொடர்ந்து வருவதாக கவுசல்யா அழுத்தியழுத்தி சொல்லிக் கொண்டே இருக்கிறாராம். இதனால் அவருக்கு பாதுகாப்பு அளிக்கும் போலீஸ் உச்சகட்ட அலர்ட்டில் இருக்கிறது.