Mothers cried hoarsely pawned to write the exam the last girls Hema
நீட் தேர்வு தோல்வியால் மரணமடைந்த அரியலூர் மாணவி அனிதாவின் நினைவுகள் இன்றும் நீங்காத நிலையில், இந்த ஆண்டும் நீட் தேர்வுக்காகத் தமிழக மாணவர்கள் வஞ்சிக்கப்படுவது மாணவர்கள் மற்றும் பெற்றோர்களை மிகுந்த சிரமத்துக்கு உள்ளக்கியுள்ளனர். மற்ற மாநிலங்களில் உள்ள மாணவர்களுக்கு அந்தந்த மாநிலங்களிலேயே தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அனால் தமிழக மாணவர்கள் பலருக்கு ராஜஸ்தான், தெலங்கானா, கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டிலேயே தேர்வு மையங்களை ஒதுக்க நேரமில்லை என்று மத்திய அரசு கைவிரித்து விட்டது.
இவ்வாறு வெளி மாநிலங்களில் தேர்வு மையங்கள் போடப்பட்டுள்ளதால் அங்கு சென்று திரும்புவதற்குக் குறைந்தது ரூ.5 ஆயிரம் முதல் ரூ. 10 ஆயிரம் வரை செலவாவதால் கிராமப்புற மாணவர்கள் இவ்வளவு தொகை செலவு செய்வதென்பது முடியாத காரியம். இதனால் வெளி மாநிலங்களுக்குச் செல்லும் மாணவர்களுக்கு உதவிகள் குவிகிறது.
இதனால் மாணவர்களும் பெற்றோர்களும் தங்களால் முடிந்த வகையில் பணத்தை புரட்டித் தேர்வு எழுத வெளி மாநிலங்களுக்குக் கிளம்புகின்றனர். அதுபோன்றுதான் அரியலூர் மாணவி ஹேமாவும் தனது தாயின் கம்மலை அடகு வைத்து தேர்வு எழுதுவதற்காக கேரளா புறப்பட்டுச் சென்றுள்ளார். அரியலூர் மாவட்டம் தவுத்தாய்குளம் பகுதியைச் சேர்ந்தவர் மாணவி ஹேமா. இவருக்கு மருத்துவராக வேண்டும் என்பதே லட்சியம். மருத்துவப் படிப்புக்கு நீட் தேர்வு கட்டாயம் என்பதால் அதற்குத் தீவிரமாகப் பயின்றுவந்தார்.
நீட் தேர்வுக்கான விண்ணப்பப் படிவத்தில் தமிழகத்திலேயே தேர்வு மையம் ஒதுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். அதன்படி, திருச்சியில் தேர்வு மையம் இருக்கும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் ஹேமாவுக்கு எர்ணாகுளத்தில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டதால் அதிர்ச்சியடைந்தார்.
கேரளாவுக்குச் சென்று வந்தால் பயணச் செலவு, தங்கும் இடச் செலவு என ரூ.3 ஆயிரம் முதல் 4 ஆயிரம் வரை ஆகும் என்று தனது தாயிடம் புலம்பியுள்ளார். பணம் இல்லா நிலையில் நேற்று ஹேமாவின் தாய் உடனே தனது கம்மலை அடகு வைத்து பணம் ஏற்பாடு செய்துள்ளார். இதைத் தொடர்ந்து நேற்று மாலை தனது தாய் கவிதாவுடன் திருச்சியிலிருந்து எர்ணாகுளத்திற்கு சென்றார்.
இதுபற்றி ஹேமா, “என் அம்மாவுக்கு ஊர் உலகம் தெரியாது. எனக்காக அம்மாவின் கம்மலை அடகு வைத்து அழைத்துக் கொண்டு செல்கிறேன். எர்ணாகுளத்தில் உள்ள தேர்வு மையத்துக்கு எப்படிச் செல்லப் போகிறேன் என்று தெரியவில்லை” என்று ஊடகம் ஒன்றிடம் கூறியுள்ளார்.
“ஏழைக் குடும்பத்தில் பிள்ளைகளைப் படிக்கவைப்பதே தற்போது நாய் படாத பாடுபடுகிறார்கள் பெற்றோர். அதில் நீட் தேர்வுக்கு பயிற்சி பெற அதிக செலவு செய்ய நேரிடுகிறது. இதில் தேர்வு எழுதச் செல்வதற்கும் ஆயிரக்கணக்கில் செலவு செய்ய வேண்டிய நிலை உருவாகியுள்ளது” என்று ஹேமாவின் பெற்றோர் தெரிவித்தார். திருச்சி, அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட பகுதியைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் நூற்றுக்கணக்கானோர் கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் உள்ள நீட் தேர்வு மையத்திற்கு திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் இருந்து டி கார்டன் விரைவு ரயில் மூலம் நேற்று புறப்பட்டுச் சென்றுள்ளனர்.
