என்கவுன்டரில் கொல்லப்பட்ட ரவுடிக்கு அதிமுக எம்.எல்.ஏ. அஞ்சலி! சிஷ்யனுக்கு நன்றிக்கடன் செலுத்திய குரு!
என்கவுன்டரில் கொல்லப்பட்ட ரவுடி ஆனந்தன் படத்திற்கு எம்.எல்.ஏ. ரவி அஞ்சலி செலுத்தியுள்ள சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராயப்பேட்டை பகுதியில் கூட்டாளிகளுடன் பெண்களை கேலி செய்துள்ளார். தகவல் அறிந்த போலீசார் சிலர் சம்பவ இடத்திற்கு சென்றனர். அப்போது, காவலர் ராஜவேலுவை சரமாரியாக தாக்கிவிட்டு தப்பியோடிவிட்டார் ஆனந்தன். இதில் ராஜவேலுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அப்போது காவல்துறையினர் ஆனந்தனை பிடித்தனர். ஆனால் அவர்களை தாக்கிவிட்டு, வாக்கி டாக்கியையும் ஆனந்தன் திருடிச் சென்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து ராஜவேலுவை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்த போலீசார், ஆனந்தனை தேடி வந்தனர்.
கடந்த ஜூலை 4 ஆம் தேதி இரவு அடையாறு மத்திய கைலாஷ் பகுதியிலுள்ள சென்ட்ரல் பாலிடெக்னிக் அருகே கூட்டாளிகளுடன் ஆனந்தன் பதுங்கியிருந்தபோது அவரை போலீசார் சுற்றி வளைத்தனர். ஆனால் மீண்டும் போலீசாரை தாக்கிவிட்டு தப்பியோட ஆனந்தன் முயன்றார். எனவே போலீசார் தற்காப்புக்காக ஆனந்தனை சுட்டனர். இதில் சம்பவ இடத்திலேயே ஆனந்தன் பலியானார்.
ரவுடி ஆனந்தன் 16-ம் நாள் நிகழ்ச்சியில் அதிமுக எம்.எல்.ஏ. விருகை ரவி பங்கேற்றது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கொலை, கொள்ளை, கொலை முயற்சி என 12 வழக்குகள் நிலுவையில் உள்ள ரவுடி ஆனந்தன் விருகை ரவிக்கு பல்வேறு வகையில் துணையாக இருந்ததாக தகவல் வந்துள்ளது. ஏற்கனவே ரவுடி கொக்கி குமாரை அமைச்சர் மணிகண்டன் சந்தித்து பேசியது சர்ச்சையானது குறிப்பிடதக்கது.