ஒயின் ஷாப்பை மூடலைன்னா ராஜினாமா பண்ணிடுவேன்…சூலூர் எம்எல்ஏ கனகராஜ் மிரட்டல்..
ஒயின் ஷாப்பை மூடலைன்னா ராஜினாமா பண்ணிடுவேன்…சூலூர் எம்எல்ஏ கனகராஜ் மிரட்டல்..
பொது மக்களுக்கு பிரச்னை தரும் டாஸ்மாக் கடையை மூடாவிட்டால் தன் பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாக சூலூர் சசிகலா அணி எம்எல்ஏ கனகராஜ் அறிவித்துள்ளார். தான் ராஜினாமா செய்தால் எம்எல்ஏக்கள் பலம் குறையும் ஆட்சி கவிழும் என மிரட்டல் விடுத்துள்ளார்.
திருப்பூர் மற்றும் கோவை மாவட்ட எல்லைப்பகுதியில் உள்ள சாமளாபுரத்தில் டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பொது மக்களுக்கு ஆதரவாக சூலூர் தொகுதி சசிகலா அணி எம்எல்ஏ கனகராஜும் போராட்டத்தில் பங்கேற்றார்.
ஆனால் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கலைய சொல்லியும் அவர்கள் கலையாததால் கண்மூடித்தனமான தாக்குதலில் ஈடுபட்டனர்.
இதில் பொதுமக்கள் பலரும் காயம் அடைந்தனர். காவல்துறையின் இந்த வெறித்தனமான தாக்குதலை கண்டித்து அரசியல் கட்சிகளும், பொதுமக்களும் தங்களின் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
இது குறித்து கருத்து தெரிவித்த சூலூர் சசிகலா அணி எம்எல்ஏ கனகராஜ், மக்களுக்கு தொல்லை கொடுக்கும் டாஸ்மாக் கடையை அகற்றாவிட்டால் என் பதவியை ராஜினாமா செய்வேன் என்றார்.
அவரிடம் அணி மாறுவீர்களா என்று கேட்டதற்கு, எதற்கு அணி மாறவேண்டும். ராஜினாமா தான் செய்வேன். ராஜினாமா செய்தால் இடைத்தேர்தல் வரும். என் தொகுதி மக்கள் சம்பாதிப்பார்கள், சம்பாதிக்கட்டும் என்றார்.
மேலும் 122 எம்எல்ஏக்கள் உள்ள நிலையில் நான் ராஜினாமா செய்தால் பலரும் குறையும், அதனால் ஆட்சி கலையும். ஆட்சி கலைந்தால் கலையட்டும் என்றார்.