செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டவுடன் அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தக் கோரி, அவரது மனைவி மேகலா உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு  தாக்கல் செய்திருந்தார்.

அமைச்சர் செந்தில் பாலாஜி அதிமுக ஆட்சிக் காலத்தில் அமைச்சராக இருந்தபோது அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.1 கோடியே 62 லட்சம் மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பான ஆதாரங்களுடன் புகாரை அப்போதைய எதிர்க்கட்சியான திமுக அளித்தது. இந்த வழக்கில் அமலாக்கத் துறையால் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டுள்ளார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

அப்போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கிருந்து காவிரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார். இந்நிலையில், மத்திய குற்றப் பிரிவு போலீசார் அவர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்த வழக்கில் 178 பேருக்கு சம்மன் அனுப்பி, அதில் 58 பேரிடம் விசாரணை நடத்தி விட்டதாகவும், மீதி 120 பேரிடம் விசாரணை நடத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது. செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டவுடன் அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தக் கோரி, அவரது மனைவி மேகலா உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். 

இந்த மனு நீதிபதிகள் ஜெ நிஷா பானு, சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வந்தது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்ட நிலையில் இரு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியுள்ளனர். முதலில் தீர்ப்பை வாசித்த நீதிபதி நிஷா பானு, செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதும், நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டதும் சட்டவிரோதம் என்றும், அவர் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் என்றும் கூறியிருந்தார். 

பிறகு அவரை தொடர்ந்து நீதிபதி பரத சக்கரவர்த்தி தனது தீர்ப்பில் சிகிச்சை முடிந்து குணம் அடைந்த பின்னர் செந்தில் பாலாஜியை சிறையில் அடைக்க வேண்டும் என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தார். இதனால் இந்த வழக்கு மூன்றாவது நீதிபதிக்கு பரிந்துரைக்கப்பட்டது. இதனையடுத்து மூன்றாவது நீதிபதியாக சி.வி. கார்த்திகேயனை நியமித்து தலைமை நீதிபதி கங்காபூர்வாலா உத்தரவு பிறப்பித்திருந்தார். 

இதனால் செந்தில்பாலாஜி மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை நீதிபதி சி.வி.கார்த்திகேயன் நாளை 2.15 மணிக்கு விசாரிக்க உள்ளார். உச்சநீதிமன்றம் விரைந்து விசாரிக்க உத்தரவிட்ட நிலையில், வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது. இது அரசியல் வட்டாரங்களில் பெரும் எதிர்பார்ப்பை உண்டாக்கி உள்ளது.

சூடுபிடித்த அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு: 300 ஊழியர்களுக்கு குறி மத்திய குற்றப்பிரிவு போலீஸ் அதிரடி