காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் குடமுழுக்கு சவாலான பணி என்றும், ராஜகோபுரத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளதால் அதை சரிசெய்யும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
ஸ்டாலினை பார்த்து பதறும் பாஜக சேகர்பாபு அதிரடி : சென்னை சூளையில் உள்ள அகண்ட தண்டு மாரியம்மன் திருக்கோவில் மற்றும் பட்டாளத்தில் உள்ள 40 ஆண்டுகள் பழமையான சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் குடமுழுக்கு இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, திமுக ஆட்சி அமைந்து 3000 க்கும் மேற்பட்ட கோவில்களில் குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது. திராவிட மாடல் ஆட்சி அமைந்து இதுவரை 117 முருகன் கோவில்களில் குடமுழுக்கு நடந்துள்ளது. இதுவரை 7,597.77 ஏக்கர் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளது அதனுடைய மதிப்பு 7,683 கோடிஎன கூறினார்.
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் ராஜகோபுரம் விரிசல்- சேகர்பாபு
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் குட முழுக்கை செய்வது என்பது சற்று சவாலான பணியாக இருப்பதாக தெரிவித்தவர், ராஜகோபுரம் சற்று விரிசல் ஏற்பட்டு இருக்கக்கூடிய நிலையில் உள்ளது அதனை சரி செய்யும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என கூறினார். திமுக ஆட்சியில் மொத்தம் 6,306 கோடி மதிப்பில் 26,300 பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், இந்து சமய அறநிலையத்துறை வரலாற்றில் இவ்வளவு பணிகள் மேற்கொள்ளப்படுவது திராவிடம் மாடல் ஆட்சியில் தான் என தெரிவித்தார்.
இந்தியாவில் சிறப்பாக செயல்படும் மாநிலம் என்றால் அது தமிழ்நாடு என கூறினார். பாஜக சார்பாக மதுரையில் நடத்தப்படும் முருகன் மாநாடு தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர், இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நடத்தப்படும் முருகர் மாநாடு தான் பக்தி மாநாடு, பாஜக நடத்தக் கூடியது அரசியல் கட்சி சார்பில் நடத்தப்படும் முருகன் மாநாடு என தெரிவித்தார். அதிமுக ஆட்சியில் கிளாம்பாக்கத்தில் இருந்து வெளியேறும் பயணிகளுக்கான வழி மார்க்கங்கள் ரயில் நிலையங்கள் கூட அமைக்கப்படவில்லை,
பதற்றமோ, பயமோ திமுக ஆட்சிக்கு இல்லை
அங்கு இருந்த பூங்காக்களை மேம்படுத்த வில்லை. முடங்கிக் கிடந்த கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை சரி செய்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தவர் நம்முடைய முதலமைச்சர் என தெரிவித்தார். கிளாம்பாக்கத்தில் பயணிகளுக்கு தேவையான பேருந்தை ஒரு மணி நேரத்திற்குள்ளாக அனைத்தையும் சரி செய்து பயணிகளின் பயணத்தை இனிதாக்கிய அரசு எங்களுடைய அரசு, கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தின் வெற்றியை தாங்கிக் கொள்ள முடியாதவர்கள் இதுபோன்ற குற்றச்சாட்டுகளை முன்வைக்கத்தான் செய்வார்கள் என்று கூறினார்
அமித்ஷா வருகை திமுகவிற்கு பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது என பாஜகவினர் கூறிவருவது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர், பதற்றமோ, பயமோ திமுக ஆட்சிக்கு இல்லை, திமுக கூட்டணி வலுவாக தெளிவாக உள்ளதாகவும் பதற்றம் பாஜகவிடம் இருப்பதால் தான் அவ்வப்பொழுது முக்கிய புள்ளிகள் தமிழ்நாட்டுக்கு வருகின்ற நிலை ஏற்பட்டுள்ளதாக கூறினார். தமிழ்நாடு முதலமைச்சரை பார்த்து தான் ஒன்றியமே இன்று பதற்றத்தில் உள்ளது என்பதற்கு அமித் ஷாவின் வருகையே ஒரு எடுத்துக்காட்டு என கூறினார்.
