திமுக அமைச்சர் ஐ.பெரியசாமி திடீர் வயிற்று வலியால் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினராகவும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சராகவும் இருப்பவர் ஐ.பெரியசாமி. இவர் திமுகவில் மாநில துணை பொதுச்செயலாளராகவும் இருந்து வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு திடீரென வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் உடனடியாக திண்டுக்கல்லில் இருந்து மதுரையில் அழைத்து சென்று அங்குள்ள மீனாட்சி மருத்துவமனையில் நேற்று இரவு 10 மணிக்கு அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும், மேலும் சில பரிசோதனைகள் நடைபெற்று வருவதாகவும், அவை முடிந்தவுடன் விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அமைச்சர் பெரியசாமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் திமுகவினர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை எற்படுத்தியுள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம் 16ம் தேதி சட்ட விரோத பண பரிமாற்றம் தொடர்பான வழக்கில் அமைச்சர் ஐ.பெரியசாமி, அவரது மகனும் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர், பழனி சட்டமன்ற உறுப்பினரான செந்தில்குமார், அவரது மகள் இந்திரா உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.