வணிகவரி, பதிவுத்துறைகளில் ஒரே ஆண்டில் இத்தனை கோடி வருவாய் உயர்வா..? அமைச்சர் மூர்த்தி தகவல்
வணிகவரித்துறையில் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் நடப்பு ஆண்டில் 24,527.39 கோடி வருவாயை வணிகவரித்துறை அதிகமாக ஈட்டியுள்ளதாக அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.
வணிகவரித்துறையில் வருவாய் உயர்வு
தமிழக வணிக வரித்துறையில் ஒரே ஆண்டில் 24,527.39 கோடி வருவாயை ஈட்டியுள்ளது. இது தொடர்பாக அமைச்சர் மூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில், வணிகவரித் துறையில் எடுக்கப்பட்ட பல்வேறு முயற்சிகளின் காரணமாக வணிகவரி வசூல் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. வணிகவரித்துறையில் நடப்பு நிதியாண்டில் 28.2.2023 வரையிலான மொத்த வருவாய் ரூபாய் 1,17,458.96 கோடி ஆகும். கடந்த ஆண்டின் இதே நாளில் இத்துறையின் வருவாய் ரூபாய் 92,931.57 கோடி ஆக இருந்தது. இவ்வகையில் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் நடப்பு ஆண்டில் இதே நாளில் 24,527.39 கோடி வருவாயை வணிகவரித்துறை அதிகமாக ஈட்டியுள்ளது. அதே போன்று பதிவுத்துறையில் ஆவணங்கள் பதிவின் மூலம் பெறப்படும் வருவாய் நடப்பு ஆண்டில் வரலாற்று சாதனையை எட்டியுள்ளது.
பத்திர பதிவும் வருவாய் ஈட்டியுள்ளது
நடப்பாண்டில் 28.2.2023 வரை பதிவுத்துறையில் வசூலிக்கப்பட்ட மொத்த வருவாய் ரூபாய் 15,684.83 கோடி ஆகும். கடந்த வருடம் இதே நாளில் வசூலிக்கப்பட்ட மொத்த வருவாய் ரூபாய் 12,161.51 கோடியை விட ரூபாய் 3,523.32 கோடி அதிகமாக நடப்பு ஆண்டில் பதிவுத்துறையால் வசூலிக்கப்பட்டுள்ளது. வணிகவரி மற்றும் பதிவுத்துறைகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளினாலும் தொடர்ந்து நடத்தப்பட்டு வரும் ஆய்வு கூட்டங்களினாலும் இத்துறைகளின் வருவாய் அதிகரித்து வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்
திடீர் தொழில்நுட்பக் கோளாறு.. முடங்கியது மெட்ரோ ரயில் சேவை.. பொதுமக்கள் கடும் அவதி..!