பிரசவத்தின் போது ஏற்படும் தாய் உயிரிழப்பை தடுத்து நிறுத்தி அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வலியுறுத்தியுள்ளார்.
அதிமுக ஆட்சியில் மருத்துவ திட்டம்
தமிழக சட்டப்பேரவையில் மருத்துவத்துறை மீதான மானியக்கோரிக்கை விவாதத்தில் பங்கேற்று பேசிய முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சரும், அதிமுக சட்டமன்ற உறுப்பினருமான விஜயபாஸ்கர், தமிழக அரசின் பட்ஜெட்டில் இடம்பெற்றிருக்கும் பெரும்பாலான திட்டங்கள் அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்டவை என தெரிவித்தார். கடந்த அதிமுக ஆட்சியில் ஒரே நேரத்தில் தமிழக முழுவதும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளுக்கு மருத்துவ ஆய்வு கருவிகள் மருத்துவ உபகரணங்கள் ஸ்கேன் கருவிகள் ஆகியவை அதிக அளவில் வழங்கப்பட்டதாகவும் தெரிவித்தார். மேலும் இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் தாய்ப்பால் வங்கி அதிமுக ஆட்சியில் மருத்துவமனைகளில் தொடங்கப்பட்டதாகவும் கூறினார்.

பணியாளர் நியமனம் என்ன ஆச்சு.?
2015 ஆம் ஆண்டு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் வாரியம் அமைக்கப்பட்டு அதன் மூலம் கடந்த 2012 ஆம் ஆண்டில் இருந்து 21 ஆம் ஆண்டு வரை 10 ஆண்டுகளில் 33 ஆயிரத்து 333 பேர் பணி இடங்கள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும் ஆண்டுக்கு சராசரியாக 4000 பணியிடங்கள் அதிமுக ஆட்சியில் நிறுவப்பட்டதாகவும் தெரிவித்தார். ஆனால் தற்போதைய திமுக ஆட்சியில் சராசரியாக ஆயிரம் பணியாளர்கள் மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளதாகவும் இவை கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார் திமுக ஆட்சியில் பணியிடங்கள் நிரப்பப்படும் என அறிவிப்பாணை மட்டுமே வெளியீட்டு வந்துள்ளதாகவும் பணியிடங்கள் பூர்த்தி செய்யப்படவில்லை என குற்றம் சாட்டினார்.

பிரசவத்தில் தாய் உயிரிழப்பு
பிரசவத்தின் போது தாய் உயிர் பாதுகாப்பை உறுதி செய்யும் இலக்கை அடைய வேண்டும் என வலியுறுத்தினார். அதிமுக ஆட்சிக்காலத்தில் ஒரு லட்சம் தாய்மார்களுக்கு 54 பேர் மட்டுமே உயிரிழக்கும் சூழலுக்கு கொண்டு வரப்பட்டதாகும், திமுக ஆட்சிக்கு வந்தபிறகு குறைக்கப்படவில்லை எனவும் பேசினார். அதற்கு பதிலளித்து பேசிய மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், கொரனா பெருந்தொற்று காலத்தில் உலகளவில் பிரசவ உயிரிழப்பு அதிகரித்த போதிலும், தமிழ்நாட்டில் 54 ஆக இருந்த பிரசவ உயிரிழப்பு 52.3 ஆக குறைக்கப்பட்டதாக கூறினார். தொடர்ந்து பேசிய விஜயபாஸ்கர், பிரசவத்தின் போது தாய் உயிரிழப்பை தடுத்து நிறுத்தி அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
