Marxist protesters condemned arrest of drinking water workers and cleaning workers

திருப்பூர்

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

நியாயமான ஊதியத்தை வழங்க வேண்டும் என்று எட்டு நாள்களாக திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்திய குடிநீர் திறப்பாளர்கள் மற்றும் துப்புரவு தொழிலாளர்களை கைது செய்ததை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தி ஈடுபட்டனர்.

திருப்பூர் மாநகராட்சிக்கு உள்பட்ட எட்டு ஊராட்சி மற்றும் இரண்டு நகராட்சிப் பகுதிகளைச் சேர்ந்த குடிநீர் திறப்பாளர்கள், துப்புரவு தொழிலாளர்கள் 232 பேர் மாநகராட்சி ஊழியர்களாக தரம் உயர்த்தப்பட்ட பின்னரும், அவர்களுக்கு சம்பளம் உயர்த்தப்படவில்லை.

இதனால் நியாயமான ஊதியத்தை வழங்க வேண்டும் என்று கடந்த 20–ஆம் தேதி முதல் திருப்பூர் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் குடிநீர் திறப்பாளர்கள் மற்றும் துப்புரவு தொழிலாளர்கள் ஏராளமானோர் காத்திருப்புப் போராட்டம் நடத்தினர்.

அதனைத் தொடர்ந்து எட்டு நாள்களாக நடைபெற்று வந்த இந்தப் போராட்டம் முடிவுக்கு வராததைத் தொடர்ந்து காவலாளர்கள் நேற்று முன்தினம் இரவு அவர்களை கைது செய்தனர்.

இந்த கைது நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையிலும், உடனடியாக நியாயமான ஊதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் திருப்பூர் கிளை சார்பில் மாநகராட்சி அலுவலகம் அருகில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தெற்கு ஒன்றியச் செயலாளர் மூர்த்தி தலைமை வகித்தார். தெற்கு மாநகரச் செயலாளர் ராஜகோபால், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கோபால கிருஷ்ணன், சாலையோர சங்கச் செயலாளர் பாலன் ஆகியோர் பங்கேற்றுப் பேசினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் குடிநீர் திறப்பாளர்கள், துப்புரவு தொழிலாளர்கள் உள்பட ஏராளமானோர் பங்கேற்று தங்களது எதிர்ப்பை வலுவாக பதிவு செய்தனர்.