திரிஷா,குஷ்பு,சிரஞ்சீவி மீது நாளை மான நஷ்ட ஈடு வழக்கு தொடர்கிறேன்.! மீண்டும் பரபரப்பை கிளப்பிய மன்சூர் அலிகான்
நான் பேசியதை திட்டமிட்டு எடிட் செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளாதகவும், எனவே என்னை தவறாக விமர்சனம் செய்த நடிகை திரிஷா, நடிகை குஷ்பு, நடிகர் சிரஞ்சீவி மீது மான நஷ்ட ஈடு வழக்கு நாளை தொடர இருப்பதாக நடிகர் மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார்.
![Mansoor Ali Khan has announced that the case for damages against Trisha Khushbu and Chiranjeevi will be continued tomorrow KAK Mansoor Ali Khan has announced that the case for damages against Trisha Khushbu and Chiranjeevi will be continued tomorrow KAK](https://static-ai.asianetnews.com/images/01hfvcdv6wdaw73rad9ka8ms21/screenshot-2023-11-22-164551-png_363x203xt.jpg)
திரிஷா- மன்சூர் மோதல்
நடிகர் மன்சூர் அலிகான் கடந்த வாரம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது நடிகை திரிஷா தொடர்பாக சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக பரபரப்பு ஏற்பட்டது.இதற்கு நடிகை த்ரிஷா கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். அவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் இவரை போன்றவர்களால் தான் மனித குலத்துக்கே அவப்பெயர் என்றும், என்னுடன் நடிக்க அவர் விருப்பப்பட்டுக் கொண்டே இருக்கட்டும் ஆனால் இனி தனது திரை வாழ்க்கையில் அவருடன் இணைந்து நடிக்க மாட்டேன் என்றும் கூறியிருந்தார். இந்த பதிவால் திரையுலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
மன்சூர் அலிகானுக்கு எதிராக திரண்ட திரையுலகம்
இதனை தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ், நடிகை குஷ்பு , நடிகர் சங்கத்தினர் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இதனையடுத்து தேசிய மகளிர் ஆணையத்தின் அழுத்தத்தின் பேரில் நடிகர் மன்சூர் அலிகான் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக நேரில் ஆஜராகி மன்சூர் அலிகான் விளக்கம் அளித்திருந்தார். இதனை தொடர்ந்து மன்சூர் அலிகான் வெளியிட்ட அறிக்கையில் நடிகை திரிஷாவிடம் மன்னிப்பு கேட்டிருந்தார்.
மன்னிப்பு கேட்ட மன்சூர்- ஏற்றுக்கொண்ட திரிஷா
இதனையடுத்து மன்னிப்பு பதில் அளித்த நடிகை திரிஷா 'தவறு செய்வது மனித இயல்பு. அதனை மன்னிப்பவன் தெய்வம்' என கூறியிருந்தார். எனவே இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டதாக நினைத்திருந்த நிலையில் தற்போது நடிகர் மன்சூர் அலிகான் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், குஷ்பு, திரிஷா, சிரஞ்சீவி ஆகியோர் மீது மானநஷ்ட வழக்கு, நஷ்டஈடு வழக்கு, கிரிமினல் மற்றும் சிவில் சூட், திட்டமிட்டு கலவரம் உண்டு பண்ண, பொது அமைதியை 10 நாட்களாக கெடுத்து, மடைமாற்றம் செய்ய தூண்டிய அனைத்து பிரிவுகளிலும் வழக்குகள் எனது வழக்கறிஞர் குரு தனஞ்செயன் மூலம் நாளை கோர்ட்டில் தொடுக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.
மானநஷ்ட ஈடு வழக்கு
மேலும் 11.11.2023 அன்று பத்திரிகையாளர் சந்திப்பில் நான் பேசிய 'உண்மை வீடியோவை' அனுப்பி உள்ளதாகவும். இந்த வீடியோவை தான், சரியாக ஒருவாரம் கழித்து, 19.11.2023 அன்று சில விஷமிகளால் நான் பேசியவற்றில் முன்னே பின்னே எடிட் செய்யப்பட்டு, திரிஷாவை ஆபாசமாக பேசியதாக சித்தரிக்கப்பட்டது வெளியிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். எனவே மேலும் சில ஆதாரங்களுடன் நாளை வழக்கு தொடுக்க உள்ளதாக மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார்.