Manju virattu competition in Kallur village 14 injured by attacked by bulls

அரியலூர்

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

அரியலூரில் உள்ள, கள்ளூர் கிராமத்தில் நடந்த மஞ்சு விரட்டு போட்டியில் சீறப்பாய்ந்த காளைகள் தூக்கி வீசி பந்தாடியதில் மாடுபிடி வீரர்கள் 14 பேர் பலத்த காயம் அடைந்தனர்.

அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகே கள்ளூர் கிராமத்தில் மஞ்சு விரட்டு போட்டி நேற்று நடைபெற்றது. இதனையொட்டி கிராமத்தின் நடுவீதியில் வாடிவாசல் அமைக்கப்பட்டது. 

முதலில் காளைகளுக்கும், காளையர்களுக்கும் மருத்துவ பரிசோதனை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து வாடி வாசலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்துவிடப்பட்டன. 

இதில் அரியலூர், தஞ்சாவூர், திருச்சி, பெரம்பலூர், ஜெயங்கொண்டம் உள்ளிட்ட இடங்களில் இருந்து வந்திருந்த 350-க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.

இந்த மஞ்சு விரட்டில் 150-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் பங்கேற்று சீறிப்பாய்ந்து வந்த காளைகளை போட்டி போட்டு அடக்கினர். அவர்களை மக்கள் கைத்தட்டி ஆரவாரம் செய்தனர். இதில், சில காளைகள் மாடுபிடி வீரர்களை தூக்கிவீசி பந்தாடியன. 

மஞ்சு விரட்டு காளைகள் முட்டியதில் கீழகொளத்தூரை சேர்ந்த விக்னேஷ்ராஜ் (18), பொய்யூரை சேர்ந்த ராமையன் (35), கள்ளூரை சேர்ந்த சரத்குமார் (25), ஆண்டிபட்டாகாடு கிராமத்தை சேர்ந்த பிரகாஷ் (25), இலந்தை கூடத்தை சேர்ந்த பாண்டியன் (55) உள்பட 14 பேர் பலத்த காயமடைந்தனர். அவர்களுக்கு அங்கிருந்த மருத்துவக்குழுவினரால் சிகிச்சை அளிக்கப் பட்டது.

மஞ்சு விரட்டில் காளைகளை அடக்கிய வீரர் களுக்கும், வீரர்களிடம் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் விழா குழுவினரால் வெள்ளி நாணயம், சைக்கிள், நாற்காலி, சில்வர் பாத்திரங்கள் போன்ற பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன.

மஞ்சு விரட்டு போட்டியை காண அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருச்சி, ஜெயங்கொண்டம், திருமானூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து திரளான மக்கள் பங்கேற்று போட்டியை கண்டு களித்தனர். 

இந்தப் போட்டிக்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் கள்ளூர் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.