man arrested who released video about edappadai palanisamy

சேலம்

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை இறந்ததாக விமர்சித்து ‘வாட்ஸ்-அப்பில்‘ வீடியோ பரப்பியவர் இரவோடு இரவாக கைது செய்யப்பட்டார். 

சேலம் மாவட்டம், தம்மம்பட்டி பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறித்து ‘வாட்ஸ்-அப்பில்‘ அவதூறு தகவல் பரவியது. எடப்பாடி குறித்து டி.வி.யில் முக்கிய செய்தி வெளியிடுவது போன்று, கிராபிக்ஸ் செய்து அந்த தகவல் பரவியது. 

தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கி சூட்டில் 13 பேர் காவலாளர்களால் கொல்லப்பட்ட பிறகு முதலமைச்சர் பழனிசாமியின் இந்த வீடியோ படுவேகமாக பரவியது.

அதில், "எடப்பாடி பழனிசாமி இறந்தது போன்று கண்ணீர் அஞ்சலி" போஸ்டருடன் "தமிழர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய காவல்துறையை கண்டித்து தனது உயிரை மாய்த்து கொண்ட எடப்பாடி பழனிசாமியின் ஆத்மா சாந்தி அடையட்டும்" என்று இருந்தது.

இது குறித்து சேலம் மாவட்ட ஜெயலலிதா பேரவை துணைத்தலைவர் குமரன் தம்மம்பட்டி காவலாளர்களிடம் புகார் கொடுத்தார். அதன்பேரில் காவலாளர்கள் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

மேலும், ஆத்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் (பொறுப்பு) சூர்யமூர்த்தி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்றது. 

இதில் முதலமைச்சர் பழனிசாமி குறித்து அவதூறு தகவல் பரப்பியவர் தம்மம்பட்டியைச் சேர்ந்த நடேசன் மகன் விஜயகுமார் (28) என்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து நேற்று இரவு காவலாளர்கள் விஜயகுமாரை கைது செய்தனர். 

அவரிடம் விசாரணை நடத்தியதில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறித்து வாட்ஸ்-அப்பில் அவதூறு தகவல் பரப்பியதை ஒப்புக் கொண்டார். தொடர்ந்து காவலாளர்கள் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.