பாலமேடு ஜல்லிக்கட்டு தொடங்கியது... காளையர்கள் உற்சாகம்!
மதுரை மாவட்டம் பாலமேட்டில் ஜல்லிக்கட்டுப் போட்டி இன்று காலை 8 மணிக்கு துவங்கியது. மாவட்ட ஆட்சித் தலைவர் வீரராகவ ராவ் உறுதி மொழி கூறினார். உடன், தமிழக வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமை ஏற்று ஜல்லிக்கட்டுப் போட்டியைத் துவக்கி வைத்தார். மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.
1002 காளைகள், 1188 மாடு பிடி வீரர்கள் இந்தப் போட்டியில் பங்கேற்கின்றனர். 1200க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மதுரை மாவட்டத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் சிறப்பான இடத்தைப் பெறுவது பாலமேடு ஜல்லிக்கட்டுதான். இந்தப் போட்டியின் வாடிவாசல், ஆற்றின் முகத்துவார பரந்த நிலப்பரப்பில் அமைந்திருப்பதால், பெரிய அளவில் நடைபெறுகிறது.
வாடி வாசல் பகுதியில் தேங்காய் நார்கள் போட்டு பரப்பப் பட்டிருந்தன. வீரர்களுக்கு காயம், அடிபடாத வகையில் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. இந்தப் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெறும் வீரர்களுக்கு இரு சக்கர வாகனம், டிவி., பிரிட்ஜ் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப் படுகின்றன.
காலை 8 மணிக்கு துவங்கி மாலை 3 மணி வரை இந்தப் போட்டி நடைபெறுகின்றது. முதலில் கோயில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. அவற்றை மாடு பிடி வீரர்கள் பிடிக்கவில்லை. பின்னர் தொடர்ந்து காளைகள் அவிழ்த்து விடப்பட்டு போட்டி நடைபெற்று வருகிறது.