ஜாக்டோ ஜியோ போராட்டத்துக்கு தடை - உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு...
ஜாக்டோ ஜியோ அமைப்பினர் நடத்திவரும் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்துக்கு தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
பழைய ஓய்வூதிய திட்டம் ரத்து செய்ய வேண்டும், மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான சம்பளம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதில் சில சங்கங்கள் மட்டுமே பங்கேற்றுள்ளன. ஜாக்டோ அமைப்பை சேர்ந்த 10 சங்கங்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. 56 அரசு ஊழியர் சங்கங்கள் கலந்து கொண்டுள்ளன.
இதனிடையே வழக்கறிஞர் சேகர் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஜாக்டோ ஜியோ அமைப்பு போராட்டத்திற்கு எதிராக வழக்கு ஒன்றை தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் நடத்திவரும் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்துக்கு தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், ஜாக்டோ ஜியோ செயலாளர் 14 தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.