கிரானைட் முறைகேடு வழக்கில் துரை தயாநிதி மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளன. அமலாக்கத்துறை அவரது சொத்துக்களை முடக்கியுள்ளது.
Durai Dayanidhi Case: தயாநிதி அழகிரி, முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரியின் மகனும், தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பேரனுமாவார். இவர் ஒரு தமிழ் திரைப்படத் தயாரிப்பாளராகவும், கிளவுட் நயன் மூவீஸ் நிறுவனத்தின் உரிமையாளராகவும் உள்ளார். இவர் மீது பல்வேறு வழக்குகள் தொடர்புடையவையாக குறிப்பிடப்பட்டுள்ளன. குறிப்பாக கிரானைட் முறைகேடு வழக்கு முக்கியமானது.
கிரானைட் வழக்கு
மதுரை மாவட்டம் மேலூர் கீழவளவு பகுதியில் அரசுக்குச் சொந்தமான இடத்தில் சட்டவிரோதமாக கிரானைட் கற்கள் எடுத்து அரசுக்கு ரூ.259 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக ஒலிம்பஸ் கிரானைட் நிறுவனம் மற்றும் அதன் பங்குதாரர்களான எஸ்.நாகராஜன் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதி ஆகியோர் மீது இந்திய தண்டனைச் சட்டம், பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவித்தல் மற்றும் வெடிபொருள் சட்டத்தின் கீழ் 2012-ல் கீழவளவு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
துரை தயாநிதி சொத்துக்கள் முடக்கம்
இந்த வழக்கில் நாகராஜன், துரை தயாநிதி உள்பட பலர் மீது நீதிமன்றத்தில் 2018-ல் ஆண்டு மேலூர் நீதிமன்றத்தில் 5,191 பக்கங்கள் கொண்ட குற்றபத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்த முறைகேடு தொடர்பாக துரை தயாநிதி உள்ளிட்டோர் சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை தனி வழக்கு பதிவு செய்து விசாரித்து வரும் நிலையில் மதுரை, சென்னையில் உள்ள 25 நிலங்கள், கட்டிடங்கள், வங்கியில் உள்ள நிரந்தர வைப்புத் தொகை என மொத்தம் ரூ.40.34 கோடி மதிப்பிலான சொத்துகளை தற்காலிகமாக முடக்கி அமலாக்கத்துறை உத்தரவிட்டது.
சிபிஐ நீதிமன்றம்
இந்நிலையில் வழக்கிலிருந்து தன்னை விடுவிக்கக்கோரி துரை தயாநிதி தரப்பில் மதுரை சிபிஐ நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி சண்முகவேல் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது துரை தயாநிதி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வெளிநாட்டில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், மனரீதியான பிரச்சினைகள் இருப்பதால் வழக்கிலிருந்து துரை தயாநிதியை விடுவிக்க வேண்டும் என்றார். அமலாக்கத்துறை வழக்கறிஞர், துரை தயாநிதியை நேரில் ஆஜர்படுத்தி அவரது மனநிலையை உறுதி செய்ய வேண்டும் என்றார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, துரை தயாநிதியின் சிகிச்சை குறித்த முழுமையான மருத்துவ ஆவணங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை ஜூன் 16ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
