Madras IAS academy students record the 1.50 lakh seed balls in Thanjavur...

தஞ்சாவூர்

தஞ்சாவூரில் 1.50 இலட்சம் விதைப் பந்துகளைத் தூவி மெட்ராஸ் ஐ.ஏ.எஸ் அகாதெமி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர். மாணவர்கள் மற்றும் பயிற்சி நிறுவனத்திற்கு கும்பகோணம் சார் ஆட்சியர் பிரதீப்குமார் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி சிறப்பித்தார்.

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் ஸ்ரீசரஸ்வதி பாடசாலா பெண்கள் பள்ளியில் கடந்த நவம்பர் 15-ல் கும்பகோணம் பகுதியில் உள்ள ஆறு பள்ளிகளைச் சார்ந்த 4200 மாணவ, மாணவிகளைக் கொண்டு மூன்று மணிநேரத்தில் 2.19 இலட்சம் விதைப் பந்துகள் தயாரிக்கப்பட்டன.

இது உலக சாதனையாக தமிழன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் அகாதெமி மற்றும் ஏசியன் ரெக்கார்ட்ஸ் அகாதெமி ஆகிய அமைப்புகளால் அங்கீகரிக்கப்பட்டது, மேலும், தஞ்சாவூர் மாவட்டத்திற்கு சான்றிதழும் வழங்கப்பட்டது.

முறையாக தயாரிக்கப்பட்டு உலர்த்தி, பதப்படுத்தப்பட்ட விதைப் பந்துகளை கும்பகோணத்தில் செயல்படும் மெட்ராஸ் ஐ.ஏ.எஸ் அகாதெமி பயிற்சி நிறுவன மாணவர்கள் மூலம் தூவும் நிகழ்ச்சி கடந்த 25-ஆம் தேதி காலை தொடங்கியது.

இந்த நிகழ்ச்சியை கும்பகோணம் சார் ஆட்சியர் எம். பிரதீப்குமார் தொடங்கி வைத்தார். பின்னர், அவர் விதைப் பந்துகளின் மூலம் மரங்களை உருவாக்குவதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.

கும்பகோணம் வட்டாட்சியர் மாணிக்கராஜ், பயிற்சி நிறுவன நிர்வாக இயக்குநர் எஸ். ராஜ்குமார், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து 100 மாணவர்கள் விதைப் பந்துகளை தூவும் பணியில் ஈடுபட்டனர். அவர்கள் கடந்த 25, 27, 29 ஆகிய தேதிகளில் தஞ்சை மாவட்டத்தில் உள்ள முக்கிய நெடுஞ்சாலையோரம், புறவழிச்சாலைகள், காவிரி அரசலாற்றுக் கரை, கொள்ளிடக் கரைகள் உள்ளிட்ட பகுதிகளில் 1.50 இலட்சம் விதைப் பந்துகளைத் தூவினர்.

இவ்வாறு சுற்றுச்சூழல் வளர்ச்சிக்கும், நீர்வளத்தை அதிகரித்திடும் வகையிலும் சமூக அக்கறையுடன் ஈடுபட்ட மாணவர்கள் மற்றும் பயிற்சி நிறுவனத்திற்கு கும்பகோணம் சார் ஆட்சியர் பிரதீப்குமார் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி சிறப்பித்தார்.