நீதித்துறையை ஆபாசமாக பேசிய குற்றச்சாட்டில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வழக்குப்பதிவு செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Madras High Court orders police to register a case against Seeman: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நீதித்துறையை ஆபாசமாகவும், விமர்சிக்கும் வகையிலும் பேசியதாக எழுந்த புகாரின் பேரில், அவர் மீது வழக்குப்பதிவு செய்ய சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. கடந்த 2024ம் ஆண்டு நவம்பர் மாதம் ஒரு யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்த சீமான் நீதித்துறையை அவமதிக்கும் வகையில் பேசியதாக கூறப்படுகிறது.
நீதித்துறையை ஆபாசமாக பேசிய சீமான்
மேலும் நீதிமன்ற செயல்பாடுகளை மோசமாக விமர்சித்தும் ஆபாச வார்த்தைகளால் அவர் பேசினார் என்று கூறி வழக்கறிஞர் சார்லஸ் அலெக்சாண்டர் என்பவர் போலீசில் புகார் கொடுத்திருந்தார். ஆனால் இந்த புகார் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் சார்லஸ் அலெக்சாண்டர் சீமான் மீது போலீஸ் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஆனால் எழும்பூர் நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்ததால் அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
சீமான் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவு
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், சீமான் நீதித்துறையின் நம்பிக்கையை பாதிக்கும் வகையில் கருத்து தெரிவித்துள்ளதாக மனுதாரர் சார்பில் நீதிமன்றத்தில் வாதம் முன்வைக்கப்பட்டது. இதையடுத்து மனுவை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், இந்த விவகாரத்தில் போலீசார் சட்டத்தின் கீழ் தேவையான நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஆகவே நேர்மையான விசாரணை மற்றும் சட்ட ஒழுங்கை பாதுகாக்கும் நோக்கில், சீமான் மீது உடனடியாக வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று காவல்துறைக்கு அதிரடியாக உத்தரவிட்டார்.
ஏற்கெனவே பல்வேறு வழக்குகள்
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தமிழக அரசியல் களத்தில் முக்கியமான அரசியல்வாதிகளில் ஒருவராக திகழ்கிறார். திராவிட கட்சிகளுக்கு மாற்றாக தமிழ் தேசியத்தை கையில் எடுத்து அரசியலில் ஈடுபடும் இவர் மாநில, மத்திய அரசின் தவறுகளை தொடர்ந்து விமர்சித்து வருகிறார். இதனால் அவர் மீது ஏற்கெனவே பல்வேறு வழக்குகள் உள்ளன. இப்போது நீதிமன்றத்தின் இந்த புதிய உத்தரவு சீமானின் அரசியல் நடவடிக்கைகளுக்கு மேலும் சவாலாக அமைந்துள்ளது.
