மேட்டூர்,
மேட்டூர் அணை நீர்மட்டம் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே போகிறது. தற்போது 32.81 அடியாக குறைந்துள்ளது. இந்த நிலையில் கோடையை சமாளிக்க முடியுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
கடந்த ஆண்டு பருவமழை தவறியதால் தமிழகத்தில் மழை பொழிவு மிகவும் குறைந்தே காணப்பட்டது. இதனால் மேட்டூர் அணை உள்பட பல்வேறு அணைகளுக்கு போதுமான நீர்வரத்து இல்லை.
மழை காலங்களிலேயே நீர்வரத்து குறைந்த நிலையில் தற்போது கோடைகாலம் நெருங்கி வரும் நிலையில் அணைகளுக்கு நீர்வரத்து குறைந்து கொண்டே போகிறது.
இதில் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்து வினாடிக்கு 60 கனஅடிக்கு கீழ் வருகிறது. நேற்று மிகவும் குறைந்து வினாடிக்கு 45 கனஅடி வீதமே வந்தது. இதன் காரணமாக அணையில் இருந்து பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 450 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.
இருந்தும், அணைக்கு நீர்வரத்து தண்ணீர் திறப்பைவிட பலமடங்கு குறைவாக இருப்பதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் நாள்தோறும் குறைந்து கொண்டே வருகிறது.
நேற்று முன்தினம் 32.91 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் நேற்று 32.81 அடியாக குறைந்துள்ளது.
இதன் எதிரொலியாக சுரங்க மின்நிலையம் வழியாக தண்ணீர் திறந்துவிட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இதேபோன்று 16 கண் பாலம் அருகே அணையின் உட்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சேலம் மாநகராட்சி நீரேற்று நிலையத்தில் மிதவை மோட்டார்கள் பொருத்தி தண்ணீர் எடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
கோடைகாலம் தொடங்குவதற்கு முன்பே வெயிலின் தாக்கம் கடுமையாக இருப்பதால் இந்த ஆண்டு கோடையின் தாக்கத்தை மேட்டூர் அணையில் உள்ள நீர்இருப்பைக் கொண்டு மக்களால் சமாளிக்க முடியுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதற்கிடையே, காவிரி உற்பத்தியாகும் கர்நாடக மாநிலத்தில் மேகதாது என்ற இடத்தில் அணை கட்ட அம்மாநில அரசு நிதி ஒதுக்கி உள்ளது. அவ்வாறு அணை கட்டப்பட்டால் தமிழகத்துக்கு காவிரி தண்ணீர் ஒரு சொட்டுக் கூட கிடைக்காது என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்,
எனவே, மேட்டூர் அணையை நம்பி இருக்கும் மாவட்டங்களில் குடிநீர் தேவைக்கு தண்ணீர் கிடைக்குமா? எனவும் கேள்வி எழுந்துள்ளது.
இந்த நிலையில் மேட்டூர் அணை புனரமைப்பு திட்டத்தின்கீழ் உபரிநீர் போக்கியான 16 கண் மதகுகள் வழியாக தண்ணீர் வெளியேறும் பாதையில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி தொடங்கி உள்ளது.
கரடுமுரடான பாறைகள் இடையே கான்கிரீட் கலவை கொட்டப்பட்டு தளம் அமைக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.
