கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலைக்குத் திரும்பிய மக்கள்…
கரூர்,
கரூரில், பேருந்துகள் இயக்கப்பட்டாலும், சந்தைகள், கடைகள் திறக்கப்பட்டாலும் மக்கள் கொஞ்சம் கொஞ்சமாகவே இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி வருகின்றனர்.
முதல்வர்ஜெ யலலிதா கடந்த 5-ஆம் தேதி இரவு இயர்கை எய்தினார். இதைத் தொடர்ந்து அன்று நள்ளிரவு முதல் கரூர் நகரில் பேருந்துகள் எதுவும் இயக்கப்படவில்லை.
விடுதிகல், தேநீர் கடைகள், மளிகை கடைகள், துணிக் கடைகள் என அனைத்து கடைகளையும் வியாபாரிகளே தாமாக முன்வந்து அடைத்தனர்.
இதனைத் தொடர்ந்து நேற்று முன்தினமும் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன. பேருந்துகள் ஓடாததால் பேருந்து நிலையம் வெறிச்சோடியது. இதனால் நேற்று முன்தினம் பொதுமக்களின் வாழ்க்கை வழக்கமானதாக இல்லை.
இந்த நிலையில் நேற்று காலை 6 மணி முதல் கரூர் நகரில் இருந்து அரசு மற்றும் தனியார் பேருந்துகள் அனைத்தும் வழக்கம் போல் இயங்கின. அதே போன்று கரூர் ஜவகர் பஜார், கோவை சாலை உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் கடைகள் நேற்று காலை முதல் வழக்கம் போல் திறக்கப்பட்டன. பொருட்கள் வாங்க பொதுமக்களும் வழக்கம் போல் கடைகளுக்கு வந்தனர்.
துணி ஏற்றுமதி நிறுவனம், கொசு வலை உற்பத்தி நிறுவனம், பேருந்து கூண்டு கட்டும் நிறுவனம் என அனைத்து தொழில் நிறுவனங்களும் திறக்கப்பட்டன. இதனால் வழக்கம்போல் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை தொடங்கியது.
தொழில் நிறுவனங்களில் ஆண்கள், பெண்கள் தங்கள் பணிகளில் வழக்கம் போல் ஈடுபட்டனர். பேருந்துகளிலும் பயணிகளின் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டன.
அதே போன்று கரூர் காமராஜ் மார்க்கெட், உழவர் சந்தை, பேருந்து நிலையம் அருகே உள்ள காய்கறி சந்தை ஆகியவை திறக்கப்பட்டன.
இதைத் தொடர்ந்து பொது மக்கள் காய்கறிகள், தேங்காய் உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் வாங்கிச் சென்றனர். அதே போன்று கோழிக்கறிக்கடை, ஆட்டு இறைச்சிக்கடைகளும் திறந்து இருந்தன.