மக்கள்தொகை கணக்கெடுப்பு மற்றும் தொகுதி மறுவரையறை குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் மத்திய அமைச்சர் எல்.முருகன் இடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது. ஸ்டாலின், தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறையும் என்று கூற, எல்.முருகன் இதனை மறுத்துள்ளார்.

தொகுதி சீரமைப்பு தமிழகத்தில் தொகுதிகள் குறையும் திமுக- பாஜக மோதல் : மத்திய பா.ஜ.க. அரசு சென்சஸ் மற்றும் தொகுதி மறுவரையறையைச் செயல்படுத்தவுள்ள போக்கு வஞ்சகம் நிறைந்தது. மக்கள்தொகைக் கட்டுப்பாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி வளர்ச்சியடைந்த தென்மாநிலங்கள் தண்டிக்கப்பட இருக்கின்றன என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார். மேலும் தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தைக் குறைத்து, தனக்குச் சாதகமான முறையில் நாடாளுமன்ற இடங்களை பா.ஜ.க. நிர்ணயித்துக் கொள்ளத்தான் இது வழி ஏற்படுத்தும் என கூறியிருந்தார். இதற்கு பதில் அளிக்கும் வகையில் மத்திய அமைச்சர் எல்.முருகன் வெளியிட்டுள்ள பதில் அறிக்கையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பூச்சாண்டி வித்தைகளை தமிழக மக்கள் நம்ப தயாரில்லை.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

சாதிவாரி கணக்கெடுப்பு பாஜக அரசின் சமூகநீதி சிந்தனைத் திட்டம்

நாடு முழுவதும் 2027-ல் மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி விவரங்களும் சேகரிக்கப்பட்டு, கணக்கெடுப்பு நடைபெறும் என்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு அறிவித்துவிட்டது. மத்திய அரசின் முயற்சியால் சாதிவாரி கணக்கெடுப்பு நடந்து, பழங்குடி, பட்டியலின, பிற்படுத்தப்பட்ட மக்கள் தங்கள் விகிதாச்சாரங்களுக்கு ஏற்ப இடஒதுக்கீடு உள்ளிட்ட சலுகையைப் பெறவுள்ளனர். சாதிவாரி கணக்கெடுப்பு என்பது மத்திய பாஜக அரசின் சமூகநீதி சிந்தனைத் திட்டம்.

தற்போது, மத்திய அரசே அதனை செய்வதால், மீண்டும் தனது பூச்சாண்டி கதையை அவிழ்த்து விடத் தொடங்கி இருக்கிறார் தமிழக முதலமைச்சர். மக்கள் தொகைக் கணக்கெடுப்பை 2027-ம் ஆண்டுக்குத் தள்ளிப்போட்டு, நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவத்தைக் குறைக்க பாஜக சதி செய்வதாக ஸ்டாலின் மீண்டும் ஒரு புளுகு மூட்டையை அவிழ்த்து விட்டுள்ளார். 2027-ம் ஆண்டு சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெறுவதால் தொகுதி மறுவரையறையில் தமிழகத்துக்கு எப்படி பிரதிநிதித்துவம் குறையும்? இது என்ன பூச்சாண்டி? பொய் சொல்வதிலும் ஒரு பொருத்தம் வேண்டாமா? தமிழகத்தின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் குறைக்கப்படாது என்பதை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்கள் தமிழகம் வந்தபோதே தெளிவுபடுத்தி விட்டார்.

பூச்சாண்டி காட்டி பாஜகவுக்கு எதிராக அரசியல்- எல். முருகன்

இல்லாத ஒன்றை, அறிவிக்காத ஒன்றை வைத்து விஷம பிரசாரத்தை திமுக செய்வது ஏன்? தொகுதி மறுவரையறை என்று பூச்சாண்டி காட்டி பாஜகவுக்கு எதிராக அரசியல் செய்ய முடியமா என்று, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். பாஜகவையும், மத்திய அரசையும் கண்டித்தால் தனது ஆட்சியில் நடக்கும் அவலங்களையும், ஊழல்களையும் மக்கள் மறந்து விடுவார்கள் என்று மனக்கணக்கு போடுகிறார் மு.க.ஸ்டாலின். அவரது விஷமப் பிரசாரத்தை நம்ப தமிழக மக்கள் தயாரில்லை. தமிழகத்தை குட்டிச்சுவராக்கும் திமுக ஆட்சி எப்போது அகலும் என்பது தான் தமிழக மக்களின் தற்போதைய எண்ணமும் எதிர்பார்ப்பும். இவ்வாறு மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்