"பதவி சுகங்களை அனுபவித்துவிட்டு,பதவி இல்லை என்றவுடன் அதிமுகவை அழிக்க நினைக்கிறார் ஒபிஎஸ்" - குமரகுரு எம்.எல்.ஏ
“அதிமுகவில் பதவி சுகங்களை அனுபவித்துவிட்டு தற்போது பதவி இல்லை என்றவுடன் பன்னீர்செல்வமும், அவரது ஆதரவாளர்களும் அதிமுகவை அழிக்க நினைக்கிறார்கள்” என்று அதிமுக பொதுக்கூட்டத்தில் குமரகுரு எம்.எல்.ஏ. பேசினார்.
விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை ஒன்றிய அதிமுக சார்பில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் உளுந்தூர்பேட்டை மணிக்கூண்டு திடலில் நடைபெற்றது.
சிறப்பு அழைப்பாளராக விழுப்புரம் தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் குமரகுரு எம்.எல்.ஏ. கலந்து கொண்டார்.
அப்போது அவர் பேசியது:
“என்னை தொடர்ந்து மூன்றாவது முறையாக சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுத்த இந்த தொகுதி மக்கள் தான் என்னுடைய தெய்வம். உண்மையான அதிமுக இது தான். இங்கு தான் உண்மையான தொண்டர்கள் இருக்கிறார்கள்.
மக்களை திசை திருப்ப ஓ.பன்னீர்செல்வம் பல முயற்சிகளை செய்து வருகிறார். ஆனால் அவருடைய சித்து வேலை பலிக்கவில்லை.
ஜெயலலிதா இறந்ததும் அதிமுகவை எப்படியாவது உடைத்து விட வேண்டும் என்று கனவு கோட்டை கட்டி வருகிறார் ஒபிஎஸ்.
அதிமுகவில் பதவி சுகங்களை அனுபவித்துவிட்டு தற்போது பதவி இல்லை என்றவுடன் பன்னீர்செல்வமும், அவரது ஆதரவாளர்களும் அதிமுகவை அழிக்க நினைக்கிறார்கள். ஆனால் அ.தி.மு.க.வை யாராலும் வீழ்த்த முடியாது.
எம்.ஜி.ஆருக்கு பிறகு தொடர்ந்து 2-வது முறையாக அ.தி.மு.க. ஆட்சியில் அமர்வது இதுவே முதல் முறை. இந்த ஆட்சி தொடரும்” என்று அவர் பேசினார்.