கூடங்குளம் 5,6-வது அணு உலைகளுக்கு விரைவில் ஒப்புதல்... மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவிப்பு...
ரஷியா நாட்டு உதவியுடன் கூடங்குளத்தில் அமைய உள்ள 5,6-வது அணு உலைகளுக்கு விரைவில் உள்நாட்டு ஒப்புதல் கிடைத்துவிடும். அதற்கான இறுதிக்கட்டத்தில் இருக்கிறது என்று மத்திய வௌியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியும், ரஷிய அதிபர் புதினும், ஆண்டு மாநாட்டில் சந்தித்து பேச இன்னும் 2 வாரங்கள் இருக்கும் நிலையில், இந்த அறிவிப்பு வௌியாகிஉள்ளது.
அடிக்கல்
நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் ரஷிய உதவியுடன் நிறுவப்பட்டுள்ள அணுமின்நிலையத்தில் தலா 1,000 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் 2 அணு உலைகள் செயல்பட்டு வருகின்றன. மேலும், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், ரஷிய அதிபர் புதினும், பிரதமர் மோடியும் 3, 4-வது அணு உலைகள் அடிக்கல் நாட்டினர். அந்த பணிகளும் நடந்து வருகின்றன.
5,6-வது அணு உலை
இதற்கிடையே, 2015-ம் ஆண்டு அக்டோபர் மாதம் இருதலைவர்களும் சந்தித்தபோது, கூடங்குளத்தில் 5 மற்றும் 6-வது அணு உலைகள் அமைக்கப்படும் என்று கூட்டாக அறிவித்தனர். இது தொடர்பான பொது கட்டமைப்பு ஒப்பந்தம் கடந்த டிசம்பர் மாதமே இரு நாடுகளுக்கும் இடையே கையெழுத்தாகி இருக்கவேண்டும்.
ஏன் தாமதம்?
ஆனால், ரஷியா-பாகிஸ்தான் இடையே நெருக்கம் அதிகமானதாலும், அணு பொருட்கள் விற்பனை நாடுகள் குழுவில் இந்தியா இடம் பெறுவதற்கு ரஷியாஅழுத்தம் கொடுக்கவேண்டும் என்று வற்புறுத்தி வருவதாலும் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாவது தாமதம் ஆகி வந்ததாக கூறப்பட்டது
மறுப்பு
இது குறித்து மத்திய வௌியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கோபால் பாக்லே நேற்று டெல்லியில் நிருபர்களிடம் கூறுகையில், “ அணு பொருட்கள் விற்பனை நாடுகள் குழுவில் இந்தியா இடம் பெறுவதற்கு ரஷியாஅழுத்தம் கொடுக்கவேண்டும் என்று இந்தியா வலியுறுத்தி வருகிறது என்றுஊடகங்ளில் வரும் செய்தி ஆதாரமற்றது, விளையாட்டுத்தனமானது, தவறான செய்தி.
விரைவில் ஒப்புதல்
தற்போது ரஷியாவுடன், கூடங்குளம் குறித்து மட்டுமே விவாதிக்கப்பட்டு நிலையில், அணுசக்தி வினியோக நாடுகளில் இந்தியா இடம் பெறுவது குறித்து ஆலோசிக்கப்படவில்லை. 5,6வது அணு உலைகளுக்கு உள்நாட்டு அளவில் விரைவில் ஒப்புதல் பெறும் கட்டத்தில் இருக்கிறது.
5,6-வது அணு உலைகளுக்கான பொது கட்டமைப்பு ஒப்பந்தத்துக்கு ஏற்கனவே தமிழக அரசு அமைச்சர்கள் அளவில் ஒப்புதல் அளித்துவிட்டது. இப்போது பிரதமர் அலுவலகத்தின் ஒப்புதலுக்காகவே காத்திருக்கிறோம்’’ எனத் தெரிவித்தார்.
ரஷிய பயணம்
இந்நிலையில், ஜூலை 1-ந் தேதி பிரதமர் மோடி, ரஷியாவுக்கு பயணமாகிறார். அப்போது அதிபர் புதினை சந்திக்கும்போது இரு தரப்பிற்கும் இடையே கூடங்குளம்5,6 அணு உலைகள் அமைப்பது தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.