kidnapped his son

பணத்துக்காக சொந்தக் குழந்தையையே கடத்தி பணம் பறித்த தந்தையை போலீசார் கைது செய்துள்ளனர். கணவரின் இந்த செயலால் மனைவி மற்றும் உறவினர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

சென்னை அயனாவரம் பாரக் சாலையைச் சேர்ந்தவர் ரவிக்குமார். மனைவி தமிழ் இலக்கியா மற்றும் மகன் கனிஷ்குமார் உள்ளனர். டிராவல்ஸ் அதிபரான இவர், நேற்று கனிஷ்குமாரை, ப்ளே ஸ்கூலில் விடுவதற்காக அழைத்துச் சென்றார். 

சிறிது நேரம் பின்னர், மனைவி தமிழ் இலக்கியாவிடம் செல்போனில் பேசிய ரவிக்குமார், சிலர் தன்னை அடித்துப் போட்டுவிட்டு குழந்தை கனிஷ்குமாரை கடத்தி சென்று விட்டதாக கூறினார். மேலும், ஐந்தரை லட்சம் ரூபாய் கேட்டு தன்னை மிரட்டுவதாகவும் ரவிக்குமார் கூறியதாக தெரிகிறது.

குழந்தை கனிஷ்குமார் கடத்தப்பட்டதாக வந்த தகவலை அடுத்து, தமிழ் இலக்கியா தனது நகைகளை விற்றும், தெரிந்தவர்களிடம் பணம் கேட்டும் ஐந்தரை லட்சம் ரூபாயை ஏற்பாடு செய்தார். பின்னர் ரவிக்குமாரும், தமிழ் இலக்கியாவும் பணத்துடன் குழந்தையை மீட்பதற்காக காரில் சென்றனர். அப்போது, கடத்தல்காரர்கள் தன்னை மட்டுமே பணத்துடன் வருமாறு கூறி, தமிழ் இலக்கியாவை பாதியிலேயே இறக்கி விட்டுச் சென்றுள்ளார்.

இதனால், சந்தேகம் அடைந்த தமிழ் இலக்கியா, உடனடியாக காவல் துறைக்கு தகவல் அளித்தார். இதனிடையே, கடத்தல்காரர்களிடம் தன்னிடம் இருந்து பணம் மற்றும் செல்போனை பறித்துக் கொண்டு குழந்தையை ஒப்படைத்து விட்டதாக கூறி, ரவிக்குமார் தெரிவித்துள்ளார். 

இந்த நிலையில், தமிழ் இலக்கியா கொடுத்த புகாரை அடுத்து வீட்டுக்கு வந்த போலீசார், ரவிக்குமாரை காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், ரவிக்குமார் கடத்தல் நாடகம் ஆடியுள்ளது தெரியவந்தது. குழந்தை கனிஷ்குமாரை, பெரவள்ளூரில் உள்ள நண்பர் வீட்டில் விட்டுவிட்டு வந்ததாகவும், மனைவியிடம் பணம் பறிக்கவே கடத்தல் நாடகம் ஆடியதாகவும் போலீசாரிடம் கூறினார். தனக்கு கடன் உள்ளிட்ட செலவுகள் இருந்ததால், மனைவியிடமே கடத்தல் நாடகம் ஆடியதாக ரவிக்குமார் ஒப்புக்கொண்டார். இதையடுத்து போலீசார் ரவிக்குமாரை
கைது செய்தனர். கணவரின் இந்த செயலால் மனைவி மற்றும் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.