பாஜகவை விமர்சித்த மற்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்காததையும், தன் மீதான தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியையும் அவர், உண்மையான விசுவாசியான தன் நீக்கத்தை ரத்து செய்யத் தயங்குவது ஏன் என்று வினவியுள்ளார்.

கட்சியிலிருந்து நீக்கப்பட்டு 8 ஆண்டுகள் ஆகியும் இன்றுவரை அதே உறுதியுடன் பயணித்துக் கொண்டிருக்கிறேனே. இருந்தும் இன்று வரை என்னுடைய நீக்கத்தை நீங்கள் ரத்து செய்ய தயங்குவது ஏன்? என முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். அதாவது ஒரு தொலைக்காட்சியில் காவிரி மேலாண்மை வாரியம் குறித்து திமுக பிரதிநிதியும் நெறியாளரும் கேட்ட கேள்விக்கு "அதிமுக ஒரு திராவிட கட்சி கொள்கை மற்றும் சித்தாந்த ரீதியில் தேவைப்பட்டால் பாஜகவை எதிர்த்து புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மற்றும் அம்மா வழியில் செயல்படுவோம்" என்று கூறியதற்கு என்னிடத்தில் எந்த விளக்கமும் கேட்காமல் தன்னிச்சையாக பேசிய சில மணி நேரத்தில் என்னை கட்சியிலிருந்து நீக்கிவிட்டீர்கள். 

என்னிடத்தில் விளக்கம் கேட்டிருந்தால் அது என் தனிப்பட்ட கருத்து என்று கூட நான் தெரிவித்து இருப்பேன். ஆனால் அதே பாஜக கூட்டணியால் தான் நாங்கள் தோல்வி அடைந்தோம் என்று பாஜகவை விமர்சித்த ஜெயக்குமார், கே.பி.முனுசாமி, சி.வி.சண்முகம் மற்றும் பல முன்னாள் அமைச்சர்கள் மீது நீங்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையே ஏன்? நீங்களே கூட 2024 தேர்தலுக்கு "பாஜக ஒரு மதவாத கட்சி, தமிழகத்திற்கு எந்த நன்மையும் செய்யவில்லை" என்றெல்லாம் பாஜக எதிர்ப்பு நிலையை மேற்கொண்டீர்கள். அப்படி என்றால் என்னுடைய நீக்கம் சரிதானா?

கேட்டிருந்தால் கட்சிக்கே கொடுத்திருப்பேன்

நீங்களே என்னை தலைமைச் செயலகத்திற்கு அழைத்து கட்சியில் இணைத்துக் கொண்டதாக சொன்னீர்கள் ஆனால் இரண்டு நாள் கழித்து கட்சியிலே இணைத்ததாக நான் அறிவித்தேனா என்று பல்டி அடித்தீர்கள் அது ஏன்? அம்மா மறைந்த பின் http://aiadmk.org.in என்ற டொமைன் Godaddy என்ற தளத்தில் விற்பனைக்கு உள்ளதாக விளம்பரம் வந்தது, அன்றைய தேதிக்கு சசிகலா பொதுச் செயலாளர் இருந்தார். மற்றவர்கள் அதை விலைக்கு வாங்கி கட்சிக்கு எதிராக பயன்படுத்திவிட கூடாது என்ற நல்ல நோக்கத்தோடு அதை நான் வாங்கி புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் விதிப்படி கட்சியின் பொதுச்செயலாளர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்றும் அதை ஆதரிப்பவர்களின் விவரங்களை பதிவு செய்ய சொன்னேன். நீங்கள் தலைமை பதவிக்கு வந்த பிறகு எந்த ஒரு சூழ்நிலையிலும் அது குறித்து கேட்கவில்லை கேட்டிருந்தால் அதை கட்சிக்கே கொடுத்திருப்பேன்.

ஆனால் நீங்கள் எதுவும் கேட்காமல் முதலமைச்சர் என்கிற அதிகாரத்தில் என் மீது பொய் வழக்கு போட்டு கைது செய்து 20 நாட்கள் சிறையில் அடைத்து உங்கள் கால்புணர்ச்சியை வெளிக்காட்டினீர்கள். நான் நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்று வெளியே வந்த பொழுது மீண்டும் அந்த ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என்று உங்கள் ஆட்கள் மூலமாக மனு செய்து உங்கள் வன்மத்தை தீர்க்க முயற்சி செய்தீர்கள் அது ஏன் எடப்பாடி அவர்களே? 2021 சட்டமன்ற தேர்தலின் போது நீங்களும், இளங்கோவும் இணைந்து பேசினீர்கள் அப்பொழுது கள நிலவரம் கேட்ட போது மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கு உண்டான வாய்ப்பு குறைவாக இருக்கிறது இன்னும் கடுமையாக பணியாற்ற வேண்டும் என்று சொன்னேன், உடனே திட்டமிட்டிருந்த நாம் சந்திப்பை நீங்கள் ரத்து செய்து விட்டீர்கள். இறுதியில் என்ன ஆனது? உண்மையான களநிலவரத்தை சொன்னால் அதை ஏன் ஏற்க மறுக்கிறீர்கள்?

உண்மையை ஏன் ஏற்க மறுக்கிறீர்கள்?

நான் ஜெயலலிதா அம்மா அவர்களால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவன், 2017 ஓபிஎஸ் காலத்தில் தான் கட்சியில் இணைந்தேன் என்று பொய்யான விஷமத்தனமான ஒரு வாக்குமூலத்தை நீதிமன்றத்தில் பதிவு செய்தீர்கள். அது குறித்து நான் வழக்கு தொடுத்து நீதிமன்றம் அது பொய்யான குற்றச்சாட்டு என்று தீர்ப்பளித்தது. அந்த உண்மையை ஏன் ஏற்க மறுக்கிறீர்கள்?

அதிமுக சொற்ப வாக்குகளில் தோல்வி

சி.வி.சண்முகம் மூலம் டெல்லியில் வைத்து என்னிடம் பேச்சு வார்த்தை நடத்தி நாம் சந்திப்பதற்கும் ஒரு தேதி குறிக்கப்பட்டது, ஆனால் திடீரென சந்திப்பதற்கு ஒரு நாள் முன் அதை ரத்து செய்தீர்களே அது ஏன் எடப்பாடி பழனிசாமி அவர்களே? 2021 சட்டமன்றத் தேர்தலின் போது காங்கேயம் சட்டமன்றத் தொகுதியில் வெற்றி வாய்ப்பு குறைவாக உள்ளது அங்கு அதிமுக வேட்பாளருக்கு நான் பிரச்சாரம் செய்கிறேன் என்று கேட்ட போது அதற்கு நீங்கள் அனுமதி கொடுக்கவில்லை. அந்த தொகுதியில் அதிமுக சொற்ப வாக்குகளில் தோல்வி அடைந்தது.

அதேபோல் ஈரோடு சட்டமன்ற இடைத்தேர்தலின் போதும் அங்கு நாடாளுமன்ற உறுப்பினராக இருந்திருகிறேன் அங்கு தேர்தல் பணிக்கு நான் வருகிறேன் என்று சொன்னபோது நீங்கள் அதை அனுமதிக்கவில்லை. சென்ற 2024 நாடாளுமன்ற தேர்தலின்போது கட்சி கடுமையான தோல்வியை சந்தித்ததால் எல்லோரும் இணைந்து பயணித்தால் வெற்றி வாய்ப்பு சாத்தியம் என்று ஒருங்கிணைப்பு குழுவை உருவாக்கினோம், அதற்கு நீங்கள் பத்திரிகையாளர்கள் மத்தியில் கொச்சியாக தெருவில் போகிறவர்கள் என்று பட்டம் கொடுத்தீர்கள். ஆனால் ஒன்றை மறந்து விட்டீர்கள் தெருவில் போகிற சாதாரண மனிதர்களை நம்பித்தான் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் இயக்கத்தை ஆரம்பித்தார்.

திமுகவின் B டீம் என்று சொன்னீர்கள்

நீங்கள் செங்கோட்டையன் பற்றி சொல்லும் போது அவர் திமுகவின் B டீம் என்று சொன்னீர்கள், முதல்வர் ஸ்டாலினை சந்தித்தார் என்று சொன்னீர்கள். 2021 சட்டமன்றத் தேர்தலின் போது திமுகவில் இணைந்தால் சட்டமன்ற உறுப்பினர், அமைச்சர் என எனக்கு பல உயர் பதவிகளுக்கு செல்லலாம் என எனக்கும் பலர் ஆலோசனை சொன்னார்கள். நான் எந்த சூழ்நிலையிலும் என்னை ஆளாக்கிய புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், உருவாக்கிய அதிமுகவுக்கு எதிராக தடம் பிரள மாட்டேன் என்று கட்சியிலிருந்து நீக்கப்பட்டு 8 ஆண்டுகள் ஆகியும் இன்றுவரை அதே உறுதியுடன் பயணித்துக் கொண்டிருக்கிறேனே. இருந்தும் இன்று வரை என்னுடைய நீக்கத்தை நீங்கள் ரத்து செய்ய தயங்குவது ஏன்?

வாதாடி நான் பெற்றுக் கொடுத்த தீர்ப்பு

இன்றைக்கு நீங்கள் தொண்டர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவன் என்று மார்தட்டிக் கொள்கிறீர்களே, புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் விதிப்படி தொண்டர்கள்தான் இந்த இயக்கத்தின் தலைமை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று நீதியரசர் சிஸ்தாணி அவர்கள் முன்பு என்னுடைய வழக்கறிஞர்கள் வாதாடி நான் பெற்றுக் கொடுத்த தீர்ப்பு தானே இன்றுவரை இந்த இயக்கத்திற்கும், தொண்டர்களுக்கு அரணாக உள்ளது. அதில் போட்டியிடுகிற தகுதியில் உங்கள் சுயநலத்தை காட்டினாலும் குறைந்தபட்சம் தேர்ந்தெடுக்கிற உரிமையாவது தொண்டர்களுக்கு உள்ளது என்று பெற்றுக் கொடுத்திருக்கிறேனே அதை ஏன் நீங்கள் உணர மறுக்கிறீர்கள்.

செங்கோட்டையன் மீதான குற்றச்சாட்டுகள் ஏதேனும் என் மீது உண்டா?

நீங்கள் செங்கோட்டையன் மீது சொல்லும் குற்றச்சாட்டுகள் ஏதேனும் என் மீது உண்டா? ஓபிஸ் மீது சுமத்தும் குற்றச்சாட்டுகள் ஏதேனும் என் மீது உண்டா? சசிகலா, தினகரன் மீது சுமத்தும் குற்றச்சாட்டுகள் ஏதேனும் என் மீது உண்டா? எதுவும் இல்லாமல் ஏன் நீக்கத்தை ரத்து செய்ய தயங்குகிறீர்கள் என்பதை விளக்க வேண்டும்.

இன்றளவும் நீங்கள் செய்கிற தவறுகளை மட்டுமே தனிப்பட்ட முறையில் நான் சுட்டிக்காட்டி இருக்கிறேனே தவிர, அண்ணா திமுக என்கிற கட்சிக்கும், அதன் தேர்தல் வெற்றிக்கும், புரட்சித்தலைவர் எம்ஜிஆருக்கும், ஜெயலலிதா அம்மாவுக்கும் எதிராக எந்த இடத்திலும் கருத்துக்களை தெரிவித்ததும், செயல்பட்டதும் இல்லை. ஊடகங்களால் "*அதிமுக ஆதரவாளர் எடப்பாடி எதிர்ப்பாளர்*" என்று அழைக்கப்படுகிறேன். உங்களுக்கு உண்மையிலேயே இந்த இயக்கம் வலுபெற வேண்டும் என்றால், மீண்டும் ஆட்சி கட்டிலில் அமர வேண்டும் என்றால் புரட்சித்தலைவர் எம்ஜிஆரால் உருவாக்கப்பட்டு அவரோடு பயணித்த என் போன்றவர்களது நீக்கத்தை ரத்து செய்ய தயங்குவது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ளார்.